ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியிடம் வீழ்ந்தது சென்னை அணி


ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியிடம் வீழ்ந்தது சென்னை அணி
x
தினத்தந்தி 25 Sep 2020 11:45 PM GMT (Updated: 25 Sep 2020 8:04 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி படுதோல்வி அடைந்தது.

துபாய்,

8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக நிகிடி நீக்கப்பட்டு ஹேசில்வுட் சேர்க்கப்பட்டார். டெல்லி அணியில் காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பதிலாக அமித் மிஸ்ரா இடம் பெற்றார்.

தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த சென்னை கேப்டன் டோனி இந்த தடவையும் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணியின் இன்னிங்சை ஷிகர் தவானும், பிரித்வி ஷாவும் தொடங்கினர். சாஹரின் முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா 2 பவுண்டரி ஓடவிட்டு அதிரடி காட்ட, தவான் தடுமாற்றத்திற்கு உள்ளானார். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீச வந்ததும் தாக்குதல் பாணியை தொடுத்தனர். ஜடேஜாவின் ஓவரில் தவான் சிக்சர், பவுண்டரி விரட்டினார். இதனால் ரன்ரேட் மளமளவென அதிகரித்தது. அணியின் ஸ்கோர் 94 ரன்களை (10.4 ஓவர்) எட்டிய போது தவான் 35 ரன்களில் (27 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். பிரித்வி ஷா 64 ரன்கள் (43 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் பியுஷ் சாவ்லாவின் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டும் இணைந்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். ஸ்ரேயாஸ் அய்யர் 26 ரன்களில் (22 பந்து) சாம் கர்ரன் பந்து வீச்சில் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் டோனி பாய்ந்து விழுந்து பிரமாதமாக கேட்ச் செய்தார்.

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. ரிஷாப் பண்ட் 37 ரன்களுடனும் (25 பந்து, 5 பவுண்டரி), ஸ்டோனிஸ் 5 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். சென்னை தரப்பில் பியுஷ் சாவ்லா 2 விக்கெட்டும், சாம் கர்ரன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 176 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை பேட்ஸ்மேன்களை, டெல்லி பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி திணறடித்தனர். பந்துகளை வீணடித்த தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்சன் 14 ரன்னிலும் (16 பந்து), முரளிவிஜய் 10 ரன்னிலும் (15 பந்து) நடையை கட்டினர். இந்த மந்தமான தொடக்கத்தில் இருந்து சென்னை அணியால் மீள முடியவில்லை. கைவசம் விக்கெட் இருந்தும் டெல்லி பந்து வீச்சை அடித்து நொறுக்க முடியாமல் தகிடுதத்தம் போட்டது. ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னிலும், கேதர் ஜாதவ் 26 ரன்னிலும், பாப் டு பிளிஸ்சிஸ் 43 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பேட்டிங்கில் 6-வது வரிசையில் இறங்கிய டோனியின் (15 ரன், 12 பந்து, 2 பவுண்டரி) ஆட்டத்திலும் ஏமாற்றமே மிஞ்சியது. 20 ஓவர்களில் சென்னை அணியால் 7 விக்கெட்டுக்கு 131 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா 3 விக்கெட்டும், நார்ஜே 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

3-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். ஏற்கனவே ராஜஸ்தானிடமும் தோற்று இருந்தது. டெல்லி அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

Next Story