ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம்


ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 30 Sep 2020 3:27 AM GMT (Updated: 30 Sep 2020 3:27 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்றிரவு அரங்கேறிய 11-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. 

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் ஐதராபாத்தை பேட் செய்ய அழைத்தார். இதன்படி 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. டெல்லி தரப்பில் அமித் மிஸ்ரா, காஜிசோ ரபடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 147 ரன்களே எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த டெல்லி அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.

இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு போட்டி கட்டணத்தில் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story