மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ‘கடைசி கட்டத்தில் சரியாக பந்து வீசவில்லை’; பஞ்சாப் கேப்டன் ராகுல் ஆதங்கம்


மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ‘கடைசி கட்டத்தில் சரியாக பந்து வீசவில்லை’; பஞ்சாப் கேப்டன் ராகுல் ஆதங்கம்
x
தினத்தந்தி 2 Oct 2020 10:11 PM GMT (Updated: 2 Oct 2020 10:11 PM GMT)

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ‘கடைசி கட்டத்தில் சரியாக பந்து வீசவில்லை’ என பஞ்சாப் கேப்டன் ராகுல் ஆதங்கம் தெரிவித்து உள்ளார்.

அபுதாபி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 48 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. இதில் மும்பை நிர்ணயித்த 192 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களே எடுத்து 3-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘இந்த தோல்வி வெறுப்பளிக்கிறது என்று சொல்லமாட்டேன். ஆனால் ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த 4 ஆட்டங்களில் மூன்றில் நாங்கள் எளிதாக வெற்றி பெற்று இருக்க முடியும். இந்த ஆட்டத்தில் இறுதி கட்டத்தில் (கடைசி 5 ஓவர்களில் 89 ரன்களை விட்டுக்கொடுத்தனர்) நாங்கள் சரியாக பந்து வீசவில்லை.

நாங்கள் சில தவறுகளை இழைத்தோம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வலுவாக திரும்ப வேண்டும். மற்றொரு பந்து வீச்சாளர் அல்லது ஆல்-ரவுண்டர் அணியில் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரை சேர்ப்பதா? அல்லது இதே அணியுடன் தொடருவதா? என்பது குறித்து பயிற்சியாளருடன் கலந்து பேசி முடிவு செய்வோம்’ என்றார்.

Next Story