‘மெத்தனமாக செயல்பட்டு விட்டோம்’; சென்னை கேப்டன் டோனி கருத்து


‘மெத்தனமாக செயல்பட்டு விட்டோம்’; சென்னை கேப்டன் டோனி கருத்து
x
தினத்தந்தி 3 Oct 2020 11:18 PM GMT (Updated: 3 Oct 2020 11:18 PM GMT)

சென்னை கேப்டன் டோனி மெத்தனமாக செயல்பட்டு விட்டோம் என தோல்வி குறித்து தெரிவித்து உள்ளார்.

துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் 7 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. இதில் ஐதராபாத் நிர்ணயித்த 165 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 157 ரன்களே எடுத்து அடங்கியது. 26 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 51 ரன்கள் விளாசிய ஐதராபாத் இளம் வீரர் பிரியம் கார்க் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி கூறுகையில் ‘நீண்ட நாட்களுக்கு பிறகு நாங்கள் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோற்று இருக்கிறோம். நாங்கள் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும். அதாவது கேட்ச்களை சரியாக எடுக்க வேண்டும். நோ-பால்களை வீசக்கூடாது. இவையெல்லாம் தொழில்முறை வீரர்களான நம்மால் கட்டுப்படுத்தக்கூடியது தான். நாங்கள் சில சமயங்களில் மிகவும் ரிலாக்சாக (மெத்தனமாக) இருந்து விட்டோம். ஒட்டுமொத்த ஆட்டத்தை பார்க்கையில் நாங்கள் இன்னும் சற்று நன்றாக செயல்பட்டிருக்கலாம்.

அணி மிகச் சிறப்பாக செயல்படாதபட்சத்தில் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இங்குள்ள சூழ்நிலையில் எனக்கு தொண்டை வறண்டு விடுகிறது. இதனால் இருமல் வருகிறது. அப்படிப்பட்ட சமயத்தில் நேரம் எடுத்து கொண்டு ஆடுவது தான் சரியானதாகும். மற்றபடி நான் நன்றாகவே இருக்கிறேன்’ என்றார். இந்த ஆட்டத்தில் டோனி 47 ரன்களுடன் (36 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் நின்றது குறிப்பிடத்தக்கது.

Next Story