‘ஸ்டோனிஸ் ரன்-அவுட்டால் ஆட்டத்தை இழந்தோம்’ டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் கருத்து


‘ஸ்டோனிஸ் ரன்-அவுட்டால் ஆட்டத்தை இழந்தோம்’ டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் கருத்து
x
தினத்தந்தி 12 Oct 2020 10:30 PM GMT (Updated: 12 Oct 2020 7:14 PM GMT)

‘மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டோனிஸ் ‘ரன்-அவுட்’டால் ஆட்டத்தை இழந்தோம்’ என்று டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.

அபுதாபி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது. இதில் டெல்லி நிர்ணயித்த 163 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து அசத்தியது. 36 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 53 ரன்கள் சேர்த்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். 175 ரன்கள் எடுத்து இருந்தால் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமானதாக இருந்து இருக்கும். மார்கஸ் ஸ்டோனிஸ் (8 பந்தில் 13 ரன்) ‘ரன்-அவுட்’ ஆன போது நாங்கள் ஆட்டத்தை தவறவிட்டோம். அந்த விஷயத்தில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் பீல்டிங்கில் நாங்கள் சில தவறுகளை இழைத்தோம். கேட்ச் வாய்ப்பையும் கோட்டை விட்டோம். அதனையும் சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும். ஒட்டுமொத்தமாக எல்லா துறைகளிலும் அவர்கள் எங்களை வீழ்த்தி விட்டார்கள். எந்த அணியையும் எளிதாக எடுத்து கொள்ளாமல் நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட வேண்டியது முக்கியமானதாகும். அடுத்த போட்டிக்கு முன்பாக இதுபோன்ற சில விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

Next Story