ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அதிவேக பவுலர் நோர்டியா: ஸ்டெயின் சாதனையை முறியடித்தார்


ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அதிவேக பவுலர் நோர்டியா: ஸ்டெயின் சாதனையை முறியடித்தார்
x
தினத்தந்தி 16 Oct 2020 12:08 AM GMT (Updated: 16 Oct 2020 12:08 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் அதிவேக பவுலரான நோர்டியா, ஸ்டெயின் சாதனையை முறியடித்தார்.

துபாய், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ராஜஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா வீசிய ஒரு பந்து மணிக்கு 156.22 கிலோமீட்டர் வேகத்தில் பதிவானது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேகமாக பந்து வீசியவர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடிய டேல் ஸ்டெயின் 2012-ம் ஆண்டு 154.40 கிலோமீட்டர் வேகத்தில் வீசியதே அதிவேகமாக இருந்தது.

நோர்டியா வீசிய இந்த மின்னல் வேக பந்தை ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் பவுண்டரிக்கு விரட்டியது குறிப்பிடத்தக்கது. இதே ஆட்டத்தில் நோர்டியா 154.74, 155.21 கிலோமீட்டர் ஆகிய வேகங்களிலும் பந்தை போட்டுத் தாக்கினார்.

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 26 வயதான நோர்டியா இந்த சீசனில் இதுவரை 8 ஆட்டத்தில் விளையாடி 10 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவர் கூறுகையில், ‘அதிவேகமாக வீசப்பட்ட சாதனை பந்து குறித்து எனக்கு தெரியாது. இப்போது தான் கேள்விப்படுகிறேன். ஆனால் வேகமாக பந்துவீசுவதற்கு கடினமாக உழைக்கிறேன். பந்தை ஆடுகளத்தில் சரியான இடத்தில் பிட்ச் செய்து வீச வேண்டும். அது தான் மிகவும் முக்கியம்’ என்றார். டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் விலகியதால் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டவர் தான் நோர்டியா என்பது நினைவு கூரத்தக்கது.

டெல்லி அணிக்காக ஆடும் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா (8 ஆட்டத்தில் 18 விக்கெட்) கூறுகையில், ‘நோர்டியா பந்தை அதிவேகமாக வீசியதில் எனக்கு ஆச்சரியமில்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் இது போன்று தான் வீசுகிறார். அவரை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு முறையும் பந்தை எப்படி வீச வேண்டும் என்று சிந்திப்போமே தவிர, வேகம் காட்டும் கருவி குறித்து நினைப்பதில்லை. எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு உள்ளது. நிறைய கற்றுக்கொள்கிறோம். உண்மையிலேயே அவர் அதிவேக பவுலர் தான். அவரிடம் இருந்து தொழில்நுட்ப ரீதியான சிலவிஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.


Next Story