பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தியது: கடைசி பந்தில் சிக்சர் அடித்து பஞ்சாப் அணி வெற்றி


பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தியது: கடைசி பந்தில் சிக்சர் அடித்து பஞ்சாப் அணி வெற்றி
x
தினத்தந்தி 16 Oct 2020 12:22 AM GMT (Updated: 16 Oct 2020 12:22 AM GMT)

பெங்களூரு அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து திரில் வெற்றியை பெற்றது.

சார்ஜா, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து திரில் வெற்றியை பெற்றது. லோகேஷ் ராகுல், கெய்ல் அரைசதம் விளாசினர்.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த நிலையில் சார்ஜாவில் நேற்றிரவு அரங்கேறிய 31-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் முதல்முறையாக அதிரடிவீரர் கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி தேவ்தத் படிக்கல்லும், ஆரோன் பிஞ்சும் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர். ஆச்சரியமூட்டும் விதமாக பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் முதல் ஓவரில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் மேக்ஸ்வெல்லை பயன்படுத்தினார். அந்த ஓவரில் பிஞ்ச், ஒரு சிக்சர் அடித்தார். பிஞ்ச்-படிக்கல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 38 ரன்கள் திரட்டி உடைந்தது. தேவ்தத் படிக்கல் (18 ரன்), அர்ஷ்தீப்சிங் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் விராட் கோலி வந்தார். ‘பவர்- பிளே’யான முதல் 6 ஓவர்களில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு ஆரோன் பிஞ்ச் (20 ரன்) முருகன் அஸ்வின் சுழலில் கிளீன் போல்டு ஆனார்.

3-வது விக்கெட்டுக்கு வழக்கத்துக்கு மாறாக வாஷிங்டன் சுந்தர் களம் அனுப்பப்பட்டார். 13 ரன் எடுத்த அவர் பந்தை சிக்சருக்கு விரட்ட முயற்சித்து ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே அடியெடுத்து வைத்தார்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் விராட் கோலியாலும் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறினார். இதனால் ரன்வேகம் கொஞ்சம் குறைந்தது. இந்த சூழலில் 14-வது ஓவரில் ரவி பிஷ்னோயின் பந்து வீச்சில் தொடர்ந்து 2 சிக்சர்களை பறக்க விட்ட ஷிவம் துபே 23 ரன்களில் (19 பந்து) பெவிலியன் திரும்பினார்.

இதன் பின்னர் சூறாவளி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் இறங்கினார். தாமதமாக வந்தாலும் சிறிய மைதானத்தில் வாணவேடிக்கை நிகழ்த்தப்போகிறார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் 2 ரன்னில் (5 பந்து) ஷமியின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அதே ஓவரில் கேப்டன் விராட் கோலியும் (48 ரன், 39 பந்து, 3 பவுண்டரி) வீழ்ந்தார். இதனால் ரன்ரேட் மேலும் சரிந்தது.

பெங்களூரு அணிக்கு அதிர்ஷ்டவசமாக ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் கைகொடுத்தார். 19-வது ஓவரில் ஒரு சிக்சர் விளாசிய அவர் முகமது ஷமியின் கடைசி ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டினார். உதனாவும் இறுதி ஓவரில் ஒரு சிக்சர் அடிக்க அணி 170 ரன்களை தாண்டியது. 20 ஓவர்களில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்தது. மோரிஸ் 25 ரன்களுடனும், உதனா 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் தரப்பில் முகமது ஷமி, முருகன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து 172 ரன்கள் இலக்கை நோக்கி களம் புகுந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வாலும், கேப்டன் லோகேஷ் ராகுலும் கலக்கலாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்து அட்டகாசமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். மயங்க் அகர்வால் 45 ரன்களில் (25 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) போல்டு ஆனார். இதைத் தொடர்ந்து கிறிஸ் கெய்ல் இறங்கினார். இந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் முதல்முறையாக களம் கண்ட கெய்ல் ஓரிரு ஓவர்களை சமாளித்த பிறகு தனது கைவரிசையை காட்டினார். வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் 2 சிக்சர்களை கிளப்பினார். இன்னொரு பக்கம் லோகேஷ் ராகுலும் ஏதுவான பந்துகளை தெறிக்க விட்டார். இதனால் பஞ்சாப் அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. கெய்ல் 36 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 2 ரன் மட்டுமே தேவைப்பட்டது. இறுதி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வீசினார். எளிதில் வெற்றி பெற்று விடும் என்ற நினைத்த வேளையில் பஞ்சாப் வீரர்கள் இந்த அளவுக்கு பரபரப்பாக்குவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல் 2 பந்துகளை வீணடித்த கெய்ல் 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தில் ரன் எடுக்காத லோகேஷ் ராகுல் 5-வது பந்தில் ஒரு ரன்னுக்கு முயற்சித்த போது கெய்ல் (53 ரன், 45 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். இதனால் பதற்றம் தொற்றியது.

கடைசி பந்தில் பஞ்சாப்புக்கு ஒரு ரன் தேவையாக இருந்தது. ரன் கொடுக்காமல் மடக்கினால் ஆட்டத்தை சூப்பர் ஓவருக்கு நகர்த்தலாம் என்ற எண்ணத்துடன் பெங்களூரு கேப்டன் கோலி பீல்டர்களை நெருக்கமாக நிறுத்தினார். ஆனால் புல்டாசாக வந்த கடைசி பந்தை சந்தித்த நிகோலஸ் பூரன் சிக்சருக்கு தூக்கியடித்து வெற்றிக்கனியை பறித்தார்.

பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. லோகேஷ் ராகுல் 61 ரன்களுடன் (49 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார்.

6 தோல்விகளால் துவண்டு போய் இருந்த பஞ்சாப் அணி ஒரு வழியாக வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது. இது பஞ்சாப் அணியின் 2-வது வெற்றியாகும். முதலாவது வெற்றியும் இதே பெங்களூருவுக்கு எதிராகத்தான் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 8-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.


Next Story