ஐ.பி.எல். 2020: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா


ஐ.பி.எல். 2020: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா
x
தினத்தந்தி 29 Oct 2020 3:52 PM GMT (Updated: 29 Oct 2020 3:52 PM GMT)

சென்னைக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 172 ரன்கள் குவித்தது.

அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 49வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மார்கன் தலைமையினான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் இன்று டு ப்ளிசிஸ், இம்ரான் தாஹிருக்கு பதிலாக சேன் வாட்சன், லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளனர். ப்ளே ஆஃப் வாய்ப்பை சென்னை அணி ஏற்கனவே இழந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் அதிக மதிப்பெண்களை பெறும் முனைப்புடன் கொல்கத்தா அணி இன்று களம் காண்கிறது.

கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர். பவர்-ப்ளே முடியும் வரை விக்கெட்டுகளை இழக்காமல் இருவரும் பேட்டிங் செய்து வந்த நிலையில், 8வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. கரண் சர்மா வீசிய பந்தில் ஷுப்மன் கில்(26 ரன்கள்) பவுல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சுனில் நரேன்(7 ரன்கள்) சாண்ட்னர் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். மறுமுனையில் அதிரடி காட்டிய நிதிஷ் ராணா 10 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசினார். கரண் சர்மா வீசிய 16வது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். லுங்கி இங்கிடி வீசிய 18வது ஓவரில் நிதிஷ் ராணா(87 ரன்கள், 61 பந்துகள்) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

ரிங்கு சிங் 11 ரன்களிலும், கேப்டன் இயன் மார்கன் 15 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. தினேஷ் கார்த்திக்(21 ரன்கள்) மற்றும் ராகுல் திரிபாதி(3 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து சென்னை அணி தற்போது 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

Next Story