வெளியேறப்போவது யார்? - ஐ.பி.எல். கிரிக்கெட் இன்றைய ஆட்டம்


வெளியேறப்போவது யார்? - ஐ.பி.எல். கிரிக்கெட் இன்றைய  ஆட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2020 11:17 PM GMT (Updated: 29 Oct 2020 11:17 PM GMT)

முதல் 7 ஆட்டங்களில் 6-ல் தோற்று பின்தங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி 5 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று தற்போது 12 புள்ளிகளுடன் உள்ளது.

குறிப்பாக ‘அதிரடி புயல்’ கிறிஸ் கெய்லின் வருகைக்கு பிறகு எழுச்சி கண்டிருக்கிறது. கெய்ல் ஆடிய 5 ஆட்டங்களிலும் (2 அரைசதம், 15 சிக்சருடன் 177 ரன்) அந்த அணிக்கே வெற்றி கிடைத்துள்ளது. லோகேஷ் ராகுல் (595 ரன்), மன்தீப்சிங், நிகோலஸ் பூரன், மேக்ஸ்வெல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது ஷமி (20 விக்கெட்), ரவிபிஷ்னோய் (12 விக்கெட்) அசத்துகிறார்கள். தங்களது கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதால் பஞ்சாப் வீரர்கள் கடுமையாக மல்லுகட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஆட்டங்களில் 5-ல் வெற்றி, 7-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியின் ரன்-ரேட்(-0.505) திருப்திகரமாக இல்லை. எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவு சாதகமாக திரும்பினால் பிளே-ஆப் கனவு நனவாகும். அதே சமயம் இன்றைய ஆட்டத்தில் தோற்றால் மூட்டையை கட்ட வேண்டியது தான். ராஜஸ்தான் அணி முந்தைய ஆட்டத்தில் மும்பையை பதம் பார்த்தது. இதில் பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து பிரமாதப்படுத்தினார். ஸ்டோக்ஸ், சாம்சன், பட்லர், கேப்டன் சுமித், உத்தப்பா, ராகுல் திவேதியா என்று நட்சத்திர பட்டாளத்தை கொண்டிருக்கும் ராஜஸ்தான் அணி அதிரடி காட்டி ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். ஏற்கனவே இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 224 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணி 3 பந்து மீதம் வைத்து விரட்டிப்பிடித்து சாதனை படைத்தது நினைவிருக்கலாம்.

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்


Next Story