ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது மும்பை அணி + "||" + IPL 2020 Cricket: Mumbai won by 57 runs and advanced to the final
ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது மும்பை அணி
டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
துபாய்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் ரோகித ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
துபாயில் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் 40 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். கேப்டன் ரோகித் சர்மா எல்.பி.டபில்யூ. முறையில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் அரை சதத்தைக் கடந்தனர்.
சூர்யகுமார் யாதவ் 38 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசி 51 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். களத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 14 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 200 ரன்கள் குவித்தது. இதையடுத்து 201 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. ஆனால் டெல்லி அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை. முதல் 2 ஓவர்களிலேயே ப்ரித்வீஷா, ஷிகர் தவான், ரஹானா ஆகிய மூன்று பேரும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.
2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்ததால் டெல்லி அணி சற்று தடுமாறியது. இதை மும்பை அணி பந்துவீச்சாளர்கள் கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டனர். பவர்-ப்ளே முடிவதற்குள் 32 ரன்களில் 4 விக்கெட்டுகள் சரிந்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 65 ரன்களும், அக்ஸர் படேல் 42 ரன்களும் குவித்தனர்.
இன்றைய ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சாளர் பும்ரா 4 ஓவர்கள் வீசி வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெடுகள் எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரு ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்துவீச்சாளர்(27 விக்கெட்டுகள்) என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
இறுதியாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.