டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த வரிசையிலும் விளையாட தயார் - ரோகித் சர்மா அறிவிப்பு


டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த வரிசையிலும் விளையாட தயார் - ரோகித் சர்மா அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2020 10:30 PM GMT (Updated: 22 Nov 2020 11:29 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எந்த வரிசையிலும் பேட்டிங் செய்ய தயாராக இருப்பதாக இந்திய வீரர் ரோகித் சர்மா கூறினார்.

பெங்களூரு,

இடது காலில் தசைநாரில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு உடல்தகுதியை நிரூபிப்பதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் நான் எந்த வரிசையில் விளையாடுவதற்கு அணி நிர்வாகம் விரும்பினாலும் அந்த வரிசையில் மகிழ்ச்சியோடு பேட்டிங் செய்வேன் என்பதை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். ஆனால் தொடக்க வரிசை பேட்டிங்கில் இருந்து மாற்றப்படுவேனா என்பது எனக்கு தெரியாது.

இந்திய வீரர்கள் அனைவரும் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று விட்டதால் அணியின் இன்னிங்சை தொடங்கப்போது யார்? கோலி சென்ற பிறகு அந்த வரிசையில் யாரை ஆட வைக்கலாம் என்பதை கட்டாயம் முடிவு செய்திருப்பார்கள். நான் ஆஸ்திரேலியாவுக்கு சென்றதும் அனேகமாக எல்லாமே எனக்கு தெளிவாகி விடும். என்னை பொறுத்தவரை எந்த வரிசையில் பேட்டிங் செய்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை.

ஆஸ்திரேலியாவில் பந்து எகிறும் ஆடுகளங்கள் (பவுன்ஸ்) குறித்து பேசுகிறோம். கடந்த சில ஆண்டுகளில் அங்கு பெர்த்தை தவிர மற்ற மைதானங்களில் (அடிலெய்டு, மெல்போர்ன், சிட்னி) பந்து பெரிய அளவில் பவுன்ஸ் ஆகவில்லை. 2018-19-ம் ஆண்டில் நாங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடிய போது எத்தனை பேட்ஸ்மேன்கள் பவுன்சர் பந்தில் ஆட்டம் இழந்தார்கள் என்பதை சொல்லுங்கள் பார்ப்போம். அதிவேக ஆடுகளமான பெர்த்தில் விளையாடிய போது கூட ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய மண்ணில் ஆடும் போது, நீங்கள் நன்றாக தொடங்கி விட்டாலே பாதி வேலை முடிந்தது என்று அர்த்தம்.

இப்போதெல்லாம் தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் போது ‘கட்’ அல்லது ‘புல்ஷாட்’ அடிப்பது குறித்து மட்டும் சிந்திப்பதில்லை. முடிந்தவரைக்கும் நேர்பகுதியில் பந்தை விரட்டுவதிலும் கவனம் செலுத்துகிறேன்.

சர்வதேச கிரிக்கெட்டில் எந்தவடிவிலான போட்டியும் எளிதானது அல்ல. அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி ஓராண்டுக்கு மேல் ஆகி விட்டதால் இது கடும் சவாலாக இருக்கப்போகிறது. அது பற்றி அளவுக்கு அதிகமாக யோசிக்காமல் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துவேன்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Next Story