இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லை: ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா, இஷாந்த் பங்கேற்பதில் சிக்கல்


இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லை: ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா, இஷாந்த் பங்கேற்பதில் சிக்கல்
x
தினத்தந்தி 25 Nov 2020 12:08 AM GMT (Updated: 25 Nov 2020 12:08 AM GMT)

இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் இன்னும் முழு உடல்தகுதியை எட்டாததால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

பெங்களூரு, 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) சிட்னியில் நடக்கிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது இடது பின்தொடையில் தசைநார் கிழிந்து காயமடைந்த இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. டெஸ்ட் அணியில் மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதற்கு முன்பாக உடல்தகுதியை நிரூபிப்பதற்கு அறிவுறுத்தப்பட்ட ரோகித் சர்மா சில தினங்களாக உடல்தகுதியை மீட்டெடுப்பதற்கான பயிற்சிகளை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் டாக்டர்கள், பயிற்சியாளர்கள் முன்னிலையில் மேற்கொண்டு வருகிறார். இதே போல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் ஐ.பி.எல். தொடரின் போது வயிற்றின் அடிப்பகுதியில் காயத்தில் சிக்கினார். டெஸ்ட் அணியில் அங்கம் வகிக்கும் அவரும் காயத்தில் இருந்து மீண்டு உடல்தகுதியை அடைவதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தநிலையில் இப்போதைக்கு இருவரும் முற்றிலும் குணமடைந்து உடல்தகுதியை எட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் புத்துணர்ச்சியுடன் முழு உடல்தகுதியை எட்டுவதற்கு 3 அல்லது 4 வாரங்கள் ஆகும் என்று தேசிய கிரிக்கெட் அகாடமி, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது. எனவே அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு அனேகமாக டிசம்பர் 2-வது அல்லது 3-வது வாரம் ஆகிவிடும் என்று தெரிகிறது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்படுவதால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ரோகித், இஷாந்த் ஷர்மா அங்கு செல்லும் போது இந்த தனிமைப்படுத்துதலை முடித்த பிறகே பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். அதனால் அடிலெய்டு (டிசம்பர் 17-21), மெல்போர்ன் (டிச.26-30) ஆகிய இடங்களில் நடக்கும் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் நிச்சயம் விளையாட முடியாது.

கடைசி இரு டெஸ்டில்...

அது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளில் (சிட்னியில் ஜன.7-11, பிரிஸ்பேனில் ஜன.15-19) பங்கேற்பதும் சந்தேகமாகியுள்ளது. தனிமைப்படுத்துதல் முடிந்து குறைந்தது ஒரு வாரமாவது பயிற்சியில் ஈடுபட்டால் தான் ஆஸ்திரேலிய சூழலுக்கு ஏற்ப தயாராக முடியும். தற்போது இந்திய அணி வீரர்களுக்கு தனிமைப்படுத்துதலின் போதே பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது. அதே போன்ற சலுகை ரோகித் சர்மா, இஷாந்த் ஷர்மாவுக்கும் கிடைத்தால் கடைசி இரு டெஸ்டில் கால்பதிக்க வாய்ப்பு உண்டு. ஏற்கனவே விராட் கோலி முதலாவது டெஸ்டுடன் குழந்தை பிறப்புக்காக தாயகம் திரும்ப உள்ள நிலையில் ரோகித் சர்மாவுக்கு உருவாகியுள்ள சிக்கல் இந்தியாவுக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.

நிலைமையை சமாளிக்க ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ள பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் அணியில் கூடுதலாக சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

32 வயதான இஷாந்த் ஷர்மா இதுவரை 97 டெஸ்டில் விளையாடி உள்ளார். ஆஸ்திரேலிய தொடரின் போது 100-வது டெஸ்ட் மைல்கல்லை எட்ட காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ‘20 ஓவர் போட்டிக்கு இஷாந்த் ஷர்மா தயாராக வேண்டியதாக இருந்தால் அதில் வெறும் 4 ஓவர்கள் தான் பந்து வீச வேண்டும். அந்த வடிவிலான போட்டி என்றால் பிரச்சினை இல்லை. டெஸ்ட் போட்டிக்கு நிறைய ஓவர்கள் பந்து வீச வேண்டும். அதற்கு ஏற்ப உடல்தகுதியை எட்ட வேண்டும் என்றால் மேலும் சில வாரங்கள் ஆகும்’ என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய டெஸ்ட் அணியில் ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மாற்று வேகப்பந்து வீச்சாளர் வரிசையில் கார்த்திக் தியாகி, கம்லேஷ் நாகர் கோட்டி, இஷான் போரெல் இடம் பிடித்துள்ளனர். தேவைப்பட்டால் இந்த 3 பேரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.

Next Story