தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி: பார்லில் இன்று நடக்கிறது


தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி: பார்லில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 28 Nov 2020 11:48 PM GMT (Updated: 28 Nov 2020 11:48 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப்டவுன்,

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் நடந்தது. 

இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாப் டுபிளிஸ்சிஸ் 58 ரன்னும் (40 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), வான்டெர் துஸ்சென் 37 ரன்னும், கேப்டன் குயின்டான் டி காக் 30 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், டாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 34 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஜானி பேர்ஸ்டோ (86 ரன்கள், 48 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை நிலைத்து நின்று அதிரடியாக ஆடியதுடன் சிக்சர் விளாசி இலக்கை எட்ட வைத்தார். அவருடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களில் (27 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார். 

இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில்5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி பார்லில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story