ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகள்? - கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தில் 24-ந்தேதி ஆலோசனை


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகள்? - கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தில் 24-ந்தேதி ஆலோசனை
x
தினத்தந்தி 3 Dec 2020 11:54 PM GMT (Updated: 3 Dec 2020 11:54 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இரண்டு புதிய அணிகளை சேர்ப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

மும்பை, 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வருகிற 24-ந்தேதி மும்பையில் நடக்கிறது. கூட்டம் தொடர்பாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டு விட்டது.

இந்த கூட்டத்தில் 23 விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அவற்றில் முக்கிய அம்சமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை கூடுதலாக சேர்ப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. ஐ.பி.எல்.-ல் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த போட்டிக்கு தொடர்ந்து அமோக ஆதரவு கிடைத்து வருவதால் அணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அதானி குழுமம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.ஜி. நிறுவனம் ஏற்கனவே ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றன. பொதுக்குழு கூட்டத்தில் ஒருமித்த ஒப்புதல் அளிக்கப்படும்பட்சத்தில், அடுத்த ஐ.பி.எல். தொடரில் கூடுதலாக 2 அணிகளை பார்க்க முடியும். நிச்சயம் ஆமதாபாத்தை அடிப்படையாக கொண்டு ஒரு அணி உருவாக்கப்படும்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியாக யாரை பங்கேற்க வைப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. அனேகமாக கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷாவின் பெயர் முன்மொழியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் வருங்கால போட்டித் தொடர்கள், 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் போட்டிக்கு ஐ.சி.சி. கோரியுள்ள வரிச்சலுகை விவகாரம், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதில் இந்தியாவின் நிலைப்பாடு, மகிம் வெர்மா ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது, இந்திய அணிக்கான 3 புதிய தேர்வாளர்கள் நியமனம், ஐ.பி.எல். நிர்வாக குழுவுக்கு இரு பிரதிநிதிகளை நியமிப்பது, நடுவர்களுக்கான கமிட்டியை அமைப்பது ஆகிய விஷயங்கள் குறித்தும் பொதுக்குழுவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

Next Story