பேட்டிங்கில் தீவிரம் இல்லை: ‘ஒரு மணி நேரத்தில் எல்லாமே முடிந்து விட்டது’ இந்திய கேப்டன் கோலி வேதனை


பேட்டிங்கில் தீவிரம் இல்லை: ‘ஒரு மணி நேரத்தில் எல்லாமே முடிந்து விட்டது’ இந்திய கேப்டன் கோலி வேதனை
x
தினத்தந்தி 19 Dec 2020 10:30 PM GMT (Updated: 19 Dec 2020 9:25 PM GMT)

முதலாவது டெஸ்ட் தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது.

அடிலெய்டு, 

வேதனையான இந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். 60 ரன்கள் முன்னிலையுடன் வந்து நிலைகுலைந்து போய்விட்டோம். முதல் 2 நாட்களில் மேற்கொண்ட கடினமான முயற்சியால் வலுவான நிலையில் இருந்தோம். நேற்றைய தினம் 1 மணி நேரத்தில் எங்களால் வெற்றியே பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். சுதாரிப்பதற்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டது. நாங்கள் இன்னும் தீவிரத்தன்மையுடன் பேட்டிங் செய்திருக்க வேண்டும். முதல் இன்னிங்சில் எப்படி பந்து வீசினார்களோ அதே போல் தான் இந்த இன்னிங்சிலும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு இருந்தது. ஆனால் இன்று (நேற்று) அவசரமாக ரன் சேர்க்கும் மனநிலையில் இருந்ததாக நினைக்கிறேன். ரன் எடுக்க இருந்த சிரமம், ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்து விட்டது. எங்களின் உத்வேகம் குறைந்ததும், அவர்கள் சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய்து வீசியதும் எங்களது வீழ்ச்சிக்கு காரணமாகும். டெஸ்ட் போட்டி வரலாற்றில் இதை விட எங்களது மோசமான பேட்டிங் இருக்க முடியாது. எனவே இங்கிருந்து இனி முன்னோக்கி மட்டுமே செல்ல முடியும். வீரர்கள் தங்களது உண்மையான திறமையை உணர்ந்து அதை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். பீல்டிங்கில் சில கேட்ச்சுகளை நழுவ விட்டதும் பின்னடைவாக அமைந்தது. இல்லாவிட்டால் முதல் இன்னிங்சில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றிருப்போம். இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த டெஸ்டில் எங்கள் வீரர்கள் வலுவாக மீண்டெழுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு கோலி கூறினார்.

இந்த ஆண்டில் இந்திய கேப்டன் விராட் கோலி விளையாடிய கடைசி போட்டி இது தான். மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவர் தாயகம் திரும்புகிறார். எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ரஹானே வழிநடத்துவார்.

Next Story