டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அருண் ஜெட்லிக்கு சிலை: இந்திய முன்னாள் வீரர் பிஷன் சிங் பெடி எதிர்ப்பு


டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அருண் ஜெட்லிக்கு சிலை: இந்திய முன்னாள் வீரர் பிஷன் சிங் பெடி எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 Dec 2020 12:32 AM GMT (Updated: 24 Dec 2020 12:32 AM GMT)

டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அருண் ஜெட்லிக்கு முழு உருவச்சிலை வைக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பெடி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.

புதுடெல்லி, 

மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண்ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 14 ஆண்டுகள் பதவி வகித்தார். அவர் மறைவுக்கு பிறகு டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்பட்டது. தற்போது டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அருண் ஜெட்லிக்கு முழு உருவச்சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பெடி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இது குறித்து டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் ரோஹன் ஜெட்லிக்கு (அருண் ஜெட்லியின் மகன்) பிஷன் சிங் பெடி எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

நான் மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆனால் நடக்கும் சம்பவங்களை பார்க்கையில் அதனை நான் மீறி விடுவேனோ? என்று அச்சப்படுகிறேன். டெல்லி கிரிக்கெட் சங்கம் எனது பொறுமையை சோதிப்பதுடன், கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு என்னை தள்ளுகிறது. டெல்லி ஸ்டேடியத்தில் உள்ள கேலரிக்கு வைக்கப்பட்டு இருக்கும் எனது பெயரை உடனடியாக நீக்கி விடுங்கள். நான் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகி விடுகிறேன். தீவிர ஆலோசனைக்கு பிறகு தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். டெல்லி ஸ்டேடியத்துக்கு அருண் ஜெட்லி பெயர் அவசர அவசரமாக வைக்கப்பட்டது. என்னை பொறுத்தமட்டில் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் அருண் ஜெட்லி சிறப்பாக செயல்படவில்லை. அவரின் நிர்வாகத்தில் பல்வேறு தோல்விகள் இருந்தன. அருண் ஜெட்லி ஒரு அரசியல் தலைவர். அவரை பாராளுமன்றத்தில் நினைவு கூறலாம். அவருக்கு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சிலை வைப்பது என்பது தவறானதாகும். மற்ற நாடுகளில் எல்லாம் கிரிக்கெட் மைதானங்களுக்கு சாதனை படைத்த வீரர்களின் பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கில் விளையாட்டில் முன்மாதிரியாக இருந்தவர்களின் பெயரை தான் முன்னிலைப்படுத்த வேண்டும். நிர்வாகிகள் பெயர் அவர்களின் கண்ணாடி அறைக்குள் தான் இருக்க வேண்டும். டெல்லி கிரிக்கெட் சங்கம் உலக கிரிக்கெட் கலாசாரத்தை புரிந்து கொள்ளவில்லை. கிரிக்கெட் வீரர்களை விட நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கேலரிக்கு எனது பெயர் இருக்க விரும்பவில்லை. எனது பெயரை உடனடியாக நீக்கி விடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story