பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கான கொரோனா தடுப்பு நடைமுறை கெடுபிடியை தளர்த்த வேண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தல்


பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கான கொரோனா தடுப்பு நடைமுறை கெடுபிடியை தளர்த்த வேண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Jan 2021 11:45 PM GMT (Updated: 7 Jan 2021 8:18 PM GMT)

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது.

புதுடெல்லி, 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. பிரிஸ்பேனில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. வீரர்கள் மைதானம், ஓட்டல் அறை தவிர வேறு எங்கும் செல்ல அனுமதி கிடையாது என்று கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடைமுறைகளை மதித்தால் இந்திய அணி வீரர்கள் பிரிஸ்பேன் வரலாம். இல்லையெனில் இங்கு வர வேண்டியது இல்லை என்று அந்த நகரத்தை உள்ளடக்கிய குயின்ஸ்லாந்து மாகாண அரசு ஏற்கனவே கூறிவிட்டது. கடுமையான நடைமுறையால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய அணியினர் பிரிஸ்பேன் சென்று விளையாட தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகின. ‘வெளியே இயல்பான நிலை நிலவும் போது, நாங்கள் மட்டும் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் இருப்பது என்பது சவாலானது’ என்று இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரஹானே கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு முறைப்படி கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது. அதில் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெற வேண்டுமானால் கொரோனா தடுப்பு நடைமுறை கெடுபிடியை தளர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொடருக்கு முன்பாக ஒருமுறை தனிமைப்படுத்துதல் நடைமுறை கடைபிடிக்க வேண்டும் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு முறை தனிமைப்படுத்துதல் நடைமுறையை பின்பற்ற வேண்டுமென்று எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

Next Story