முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: டெல்லி அணி 2-வது வெற்றி


முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: டெல்லி அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 14 Jan 2021 12:55 AM GMT (Updated: 14 Jan 2021 12:55 AM GMT)

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஆந்திராவை வீழ்த்தி, டெல்லி அணி 2-வது வெற்றியை பெற்றது.

மும்பை, 

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

மும்பையில் நேற்று நடந்த ‘இ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் டெல்லி அணி, ஆந்திராவை சந்தித்தது. முதலில் ‘பேட்’ செய்த ஆந்திர அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. டெல்லி அணி தரப்பில் பிரதீப் சங்வான் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

அடுத்து களம் கண்ட டெல்லி அணி 17 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 5 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். டெல்லி அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் மும்பையை சாய்த்து இருந்தது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அரியானா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் புதுச்சேரியை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. முதலில் ஆடிய புதுச்சேரி அணி 4 விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஷெல்டன் ஜாக்சன் 82 ரன்கள் (50 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். அரியானா அணிக்காக ஆடிய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 47 ரன்களை வாரி வழங்கினார். இதைத்தொடர்ந்து ஆடிய அரியானா அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை கடந்தது. புதுச்சேரி அணிக்கு இது 2-வது தோல்வி இதுவாகும்.

சென்னையில் நடந்த ‘பிளேட்’ பிரிவு ஆட்டம் ஒன்றில் மேகாலயா அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் மிசோரமை துவம்சம் செய்தது. இதில் மேகாலயா அணியின் கேப்டன் புனித் பிஷ்த் 51 பந்துகளில் 6 பவுண்டரி, 17 சிக்சருடன் 146 ரன்கள் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார். 20 ஓவர் போட்டி ஒன்றில் வீரர் ஒருவர் அடித்த 2-வது அதிகபட்ச சிக்சர் இதுவாகும்.


Next Story