சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்: புதுச்சேரி அணியிடம் வீழ்ந்தது மும்பை - 5 விக்கெட் கைப்பற்றி மூர்த்தி அசத்தல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Jan 2021 11:32 PM GMT (Updated: 17 Jan 2021 11:32 PM GMT)

சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரி அணியிடம் மும்பை அணி வீழ்ந்தது. அந்தப்போட்டியில் 5 விக்கெட் கைப்பற்றி மூர்த்தி அசத்தினார்.

மும்பை, 

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ‘இ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி, புதுச்சேரியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த மும்பை அணி 19 ஓவர்களில் 94 ரன்னில் சுருண்டது. 

ஜெய்ஸ்வால் (15 ரன்), ஷிவம் துபே (28 ரன்), ஆகாஷ் பர்கர் (20 ரன்) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். புதுச்சேரி வேகப்பந்து வீச்சாளர் 41 வயதான சாந்த மூர்த்தி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட் இன்னிங்சில் அதிக வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சாந்த மூர்த்தி படைத்தார். தொடர்ந்து ஆடிய புதுச்சேரி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்திலும் மும்பை அணிக்காக களம் கண்ட ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகனான அர்ஜூன் தெண்டுல்கர் பேட்டிங்கில் 3 ரன்னும், பந்து வீச்சில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் எடுத்தார். இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத மும்பை அணி தொடர்ச்சியாக சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும்.

Next Story