பிரிஸ்பேன் டெஸ்ட்: புஜாராவுக்கு கவாஸ்கர் பாராட்டு


பிரிஸ்பேன் டெஸ்ட்:  புஜாராவுக்கு கவாஸ்கர் பாராட்டு
x
தினத்தந்தி 20 Jan 2021 6:50 AM GMT (Updated: 20 Jan 2021 6:50 AM GMT)

புஜரா ஒரு போர் வீரரை போல பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் விளையாடினார் என்று கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

பிரிஸ்பேன், 

பிரிஸ்பேன் கபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை இந்தியா நேற்று பதிவு செய்தது. அதோடு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது. 

வலுவான ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி,  ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது இந்திய அணியின் இளம் பட்டாளம். கேப்டன் கோலி அணியில் இல்லாவிட்டாலும், ரகானே தலைமையில் அபாரமாக ஆடி இந்திய அணி வெற்றியை ருசித்தது கிரிக்கெட் விமர்சகர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் நங்கூரம் போல நிலைத்து நின்று இந்திய அணியின் வெற்றிக்கு  பாலம் அமைத்துக்கொடுத்த புஜாராவுக்கு இந்திய அணியில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானும் வர்ணணையாளருமான கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். கவாஸ்கர் கூறியிருப்பதாவது: -

 நிச்சயமாக இந்திய கிரிக்கெட்டிற்கு இது வியப்பான தருணம். இந்தப்போட்டியை டிரா செய்வதற்காக இந்திய வீரர்கள் தயாராகவில்லை. வெற்றியுடன் முடிக்க இந்திய வீரர்கள் விரும்பியிருக்கின்றனர். இளம் இந்திய அணி சாதித்துவிட்டது. நாங்கள் அச்சப்பட மாட்டோம் என்பதை இளம் பட்டாளம் நிரூபித்துள்ளது. மிகச்சிறப்பான வெற்றி இதுவாகும். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை சுப்மான் கில் விளாசிவிட்டார். 

 அதன்பிறகு ரிஷப் பண்ட் பொறுப்பு மிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலிய அணியை ஆதிக்கம்  செலுத்த விடாமல்  புஜாரா பார்த்துக்கொண்டார். புஜாரா ஒரு போர் வீரரை போல விளையாடினார்” என்றார். பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் 211 பந்துகளை சந்தித்த புஜாரா 56 ரன்களை அடித்தார். 

Next Story