‘ஆஸ்திரேலிய அணியின் சீண்டல்களை ஒருபோதும் மறக்கமாட்டேன்’ - சுப்மான் கில்


‘ஆஸ்திரேலிய அணியின் சீண்டல்களை ஒருபோதும் மறக்கமாட்டேன்’ - சுப்மான் கில்
x
தினத்தந்தி 23 Jan 2021 6:24 PM GMT (Updated: 23 Jan 2021 6:24 PM GMT)

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில், பலரது கவனத்தையும் ஈர்த்தவர் சுப்மான் கில்.

இந்திய அணியின் இளம் வீரரான இவர், தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, டெஸ்ட் போட்டியில் பட்டைய கிளப்பினார். தொடர்ச்சியாக ரன் வேட்டை நடத்தி, இந்திய அணிக்கு பக்கபலமாக திகழ்ந்தார். இவர் ஆஸ்திரேலியாவில் கிடைத்த மறக்கமுடியாத அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

* மறக்கமுடியாத அனுபவம் எது?

ஆஸ்திரேலிய வீரர்களின் சீண்டல்களை ஒருபோதும் மறக்கமாட்டேன். நம்மை கோபப்படுத்தி, அதன் மூலம் சாதிக்க நினைப்பார்கள். அந்த ‘டிரீட்மெண்ட்’ காலத்தை, கிரிக்கெட் வாழ்க்கையில் எப்போதுமே மறக்க மாட்டேன்.

* ஆஸ்திரேலிய வீரர்கள் வம்புக்கு இழுப்பதில் கெட்டிக்காரர்கள். அவர்களது ‘சீண்டல் திறமை’யை உங்களிடம் வெளிக்காட்டியதை பற்றி கூறுங்கள்?

அது எதிர்பார்த்த ஒன்றுதான். டெஸ்ட் போட்டிகளில் அடிக்கடி வாய்மொழி சீண்டல்கள் நிகழ்வது சாதாரண ஒன்றுதான். இருப்பினும் இம்முறை ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லைமீறிய சீண்டல்களை கட்டவிழ்த்துவிட்டனர். இந்திய அணி வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியதையும், புதுப்புது வீரர்கள் களமிறங்கியதையும் காரணம்காட்டி, எல்லோரையும் வம்புக்கு இழுத்தனர். பொதுவாக புதுமுக வீரர்களைத்தான் அவர்கள் டார்க்கெட் செய்வதுண்டு. ஆனால் இம்முறை அனுபவ வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. ரோகித் சர்மா, புஜாரா, ரஹானே, அஸ்வின் என அவர்களால் முடிந்த அளவிற்கு வம்புக்கு இழுத்தனர். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயினின் சீண்டல்களும் அதிகமாக இருந்தது. அவர் விக்கெட் கீப்பராக விளையாடுவதால், இந்திய பேட்ஸ்மேன்களை சீண்டிப்பார்ப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.

* ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களின் நையாண்டி பேச்சுக்களை கடந்து வந்த விதம் பற்றி கூறுங்கள்?

ஆஸ்திரேலிய வீரர்கள் என்னை போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்களை வம்புக்கு இழுத்தால், ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தையே வம்புக்கு இழுத்திருக்கிறார்கள். அவர்கள் பேசியதை என்னால் கேட்கமுடியவில்லை. இருப்பினும் இந்திய பயிற்சியாளர் களின் மூலமாக தெரிந்து கொண்டேன். விராட் கோலி இல்லாத இந்திய அணியும், பல் பிடுங்கிய பாம்பும் ஒன்று என்றார்கள். ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் பந்துவீசும்போது, ‘தலைக்கு பந்துவீசாதே. விளையாட ஆளில்லை’ என்றார்கள். ஆஸ்திரேலிய அணியின் புதுமுக வீரர்களை எல்லாம் பேசவைத்து, மூத்த வீரர்கள் வேடிக்கை பார்த்தனர்.

* வார்த்தை சீண்டல்கள், இருவேறு அணியின் நட்புறவை பாதிக்குமா?

ஆண்ட்ரூ சைமன்ஸ்-ஹர்பஜன் சிங், ஸ்ட்ராஸ்-யுவராஜ் சிங், சச்சின் தெண்டுல்கர்-அக்தர்... இப்படி பல ஜோடிகளை இந்த கேள்விக்கான உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இவர்கள் போட்டிக்களத்தில் நேருக்கு நேர் மல்லுக்கட்டினாலும், தனிப்பட்ட வாழ்வில் சிறந்த நண்பர்கள். போட்டியும், சூழ்நிலையும் வீரர்களுக்குள் சண்டை, சச்சரவுகளை உண்டாக்கினாலும், காலம் அவர்களை நல்ல நண்பர்களாக மாற்றிவிடுகிறது. இந்த கோட்பாட்டில் இருந்து விலகி செல்பவர்கள் சிலரே.

* டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்திருப்பது கடினமான ஒன்று. அதை எப்படி சமாளித்தீர்கள்?

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குபவர்கள், அந்த அணியின் சிறந்த ஆட்டக்காரர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான், முதல் 10 ஓவர்களுக்கு தாக்குப்பிடிக்க முடியும். புது பந்து நன்றாக ‘ஸ்விங்’ ஆகும் என்பதால்தான் சிறந்த ஆட்டக்காரர்களை தேர்ந்தெடுத்து, ஆட்டத்தை தொடங்கி வைக்க அனுப்பிவைப்பார்கள். அவர்களது வேலை, புது பந்தை மட்டையால் அடித்து சேதப்படுத்தி, பழைய பந்தாக மாற்றுவதுதான். இது நடந்து விட்டால், ஆட்டம் நம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். பழைய பந்தில் உயிர் இருக்காது. அதனால் வேகமும், ‘ஸ்விங்’-கும் இருக்காது. இந்த பார்முலாவைத்தான் நானும், ஹனுமா விகாரியும், ரோகித் சர்மாவும் பயன்படுத்தினோம். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

* வார்த்தை சீண்டல்கள் கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த சர்ச்சையினால் ஆஸ்திரேலிய அணியினரின் சீண்டல்கள் குறையுமா?

இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான். ஆஸ்திரேலிய அணியின் பெரும் பலமே, சீண்டல் பேச்சுக்கள்தான். ஆட்டக்காரர்களை வீண் பேச்சுக்களால் கோபப்படுத்தி, அவர்களது அமைதியான மனநிலையை குழப்பி, அதன் மூலம் விக்கெட் எடுப்பதில் அவர்கள் கில்லாடிகள். அவர் களது பாரம்பரியத்தை, திடீரென மறந்துவிடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எது எப்படியோ..., அவர்களது சீண்டல்களுக்கு, இந்திய அணி சார்பாகவும் பதிலடி கொடுக்கப்படுகிறது.

* ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின், இந்திய விக்கெட் கீப்பரான ரிஷாப் பண்ட்டை தொடர்ச்சியாக கிண்டல் செய்ததை ஏற்றுக்கொள்வீர்களா?

இந்த விஷயத்தில் எது சரி, எது தவறு என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது. ஆனால் என்னுடைய முழு ஆதரவும் ரிஷாப் பண்டிற்கு உண்டு. டிம் பெயின், இந்திய அணியின் பெரும்பாலான வீரர்களை வம்புக்கு இழுத் திருக்கிறார். ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், அஸ்வின், பும்ரா... என அவரது சீண்டலில் சிக்காதவர்கள் யாரும் இல்லை. குறிப்பாக அவரது கேலி பேச்சுகள் ரோகித் சர்மாவையும், ரிஷாப் பண்டையுமே அதிகமாக குறிவைக்கும். ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் லியான் ஓவரை ரிஷாப் பண்ட் எதிர்கொண்டபோது, ‘இந்த ஓவரில் ஒரு சிக்சராவது அடித்தால், நான் இந்திய அணியின் ரசிகனாக மாறிவிடுவேன்’ என்று சக வீரர்களிடம் கூறி சிரித்தார். அவரது சீண்டலுக்கு ரிஷாப் பண்ட் சிக்ஸராகவும், பவுண்டரியாகவும் பதிலடி கொடுத்தார். அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை, டிம் பெயின் பேட்டிங் செய்யும்போது ரிஷாப் பண்டை ஸ்பைடர்மேன் என கூறி, பாட்டுப்பாடி கடுப்பேற்றினார்.

Next Story