கொரோனா தடுப்பு நடைமுறைகளால், சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு; ஜோஸ் பட்லர் தகவல்


பயிற்சியில் இங்கிலாந்து வீரர்கள் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பர்ன்ஸ்.
x
பயிற்சியில் இங்கிலாந்து வீரர்கள் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பர்ன்ஸ்.
தினத்தந்தி 30 Jan 2021 9:01 PM GMT (Updated: 30 Jan 2021 9:01 PM GMT)

கடுமையான கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளால் சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்தும் முடிவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வந்திருப்பதாக ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.

3 வீரர்கள் பயிற்சி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 5-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இரு அணி வீரர்களையும் 6 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டது. நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள வீரர்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை முடிந்து 2-ந்தேதியில் இருந்து பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் முன்பே சென்னைக்கு வந்து விட்ட இங்கிலாந்து வீரர்கள் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் ஆகியோரின் தனிமைப்படுத்துதல் முடிந்து விட்டதால் அவர்கள் மட்டும் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். அடுத்த 3 நாட்கள் தினமும் 2 மணி நேரம் அவர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்றும், இங்கிலாந்து அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட 2-வது கட்ட கொரோனா பரிசோதனையிலும் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியிருப்பதாகவும் அந்த அணியின் மீடியா மேலாளர் டேனி ரிபென் தெரிவித்தார்.

பட்லர் பேட்டி
இதற்கிடையே இங்கிலாந்து அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் நேற்று காணொலி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஒவ்வொரு முறையும் பலம் வாய்ந்த அணி களத்தில் இருக்க வேண்டும் என்று தான் நீங்கள் விரும்புவீர்கள். தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டு கடினமான சூழலை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக நாங்கள் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை பெற்று எங்களுக்கு பிடித்தமான பணியை செய்கிறோம். அதே சமயம் குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருப்பது, தனிமைப்படுத்துதல், ஓட்டல் அறையிலேயே முடங்கி இருப்பது இவை எல்லாம் மிகவும் சவாலான விஷயங்கள் என்பதை ஏற்கனவே கூறியிருக்கிறோம். வீரர்களின் நலன் கருதி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த தொடரில் சுழற்சி முறையில் வீரர்களை பயன்படுத்தும் 
முனைப்புடன் உள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். ஏனெனில் எல்லா நேரமும் மிகச்சிறந்த வீரர்கள் ஒருசேர களத்தில் இருந்து திறமையை காட்டுவதை பார்க்கவே அனைவரும் விரும்புவார்கள். ஆனால் தற்போதைய நிலைமையில் அது சாத்தியமில்லை. ஒரு வீரர், கடும் கட்டுப்பாடுகளுடன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் நீண்ட நாட்கள் இருக்க முடியாது. அதனால் இப்போதைக்கு குறுகிய கால லட்சியங்களுடன் விளையாடுவதை எதிர்நோக்குகிறோம்’ என்றார்.

600 ரன் தேவை
மேலும் அவர் கூறுகையில், ‘இங்கிலாந்து வீரர்கள் இங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி மாற்றிக்கொண்டு ஆடுவது முக்கியம். பந்து ஸ்விங் ஆகும் இங்கிலாந்தில் முதல் இன்னிங்சில் 300 ரன்கள் 

எடுத்தாலே சவாலான ஸ்கோராக இருக்கும். ஆனால் இந்தியாவில் விளையாடும் போது, அதுவும் ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்ததாக இருந்தால் 600 ரன்கள் குவித்தால் தான் நல்ல ஸ்கோராக இருக்கும். அதனால் அதிக ரன்கள் குவிப்பது முக்கிய அம்சம் என்பதை உணர்ந்திருக்கிறோம். இலங்கை தொடரில் எங்கள் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதமும், சதமும் விளாசியதே அதற்கு உதாரணம்’ என்றார்.

அனேகமாக முதல் இரு டெஸ்டுக்கு பிறகு ஜோஸ் பட்லருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு கடைசி இரு டெஸ்டில் விக்கெட் கீப்பிங் பணியை ஜானி பேர்ஸ்டோ கவனிப்பார் என்று தெரிகிறது.

Next Story