முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி மகுடம் சூடுமா? இறுதி ஆட்டத்தில் பரோடாவுடன் இன்று மோதல்


கேதர் தேவ்தார்- தினேஷ் கார்த்திக்.
x
கேதர் தேவ்தார்- தினேஷ் கார்த்திக்.
தினத்தந்தி 31 Jan 2021 1:13 AM GMT (Updated: 31 Jan 2021 1:13 AM GMT)

முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் தமிழக அணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரோடாவுடன் பலப்பரீட்சையில் இறங்குகிறது.

தமிழக அணி
12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 38 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் தமிழ்நாடு அணியும், குஜராத் மாநிலத்திற்குட்பட்ட பரோடா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, தேவ்தார் தலைமையிலான பரோடாவை எதிர்த்து இன்றிரவு மல்லுகட்டுகிறது.

அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், முரளிவிஜய், விஜய் சங்கர், நடராஜன் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலைமையிலும் தமிழக அணி இந்த சீசனில் பிரமாதப்படுத்தியுள்ளது. தோல்வியே சந்திக்காமல் (7 ஆட்டத்திலும் வெற்றி) வீறுநடை போட்டு வரும் தமிழக அணி தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் இலக்கை விரட்டிப்பிடித்து அசத்தியிருக்கிறது. இதில் அரைஇறுதியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதும் அடங்கும்.

ஜெகதீசன்
இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள ஜெகதீசன் (4 அரைசதத்துடன் 350 ரன்), பாபா அபராஜித், ஹரிநிஷாந்த், கேப்டன் தினேஷ் கார்த்திக், ஷாரூக்கான், அருண் கார்த்திக் என்று யாராவது ஒருவர் ஒவ்வொரு ஆட்டத்திலும் கைகொடுத்து அணியை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.

பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய் கிஷோர் (8 விக்கெட்), முருகன் அஸ்வின் (10 விக்கெட்), முகமது (8 விக்கெட்), சோனு யாதவ் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். 2007-ம் ஆண்டில் கோப்பையை வென்றுள்ள தமிழக அணி கடந்த ஆண்டு ஒரு ரன்னில் கோப்பையை கோட்டை விட்டது. மறுபடியும் வாகை சூடுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

பரோடா எப்படி?
தமிழக அணியை போன்று பரோடாவும் தோல்வியே சந்திக்காத ஒரு அணியாகும். அந்த அணி அரைஇறுதியில் 25 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடியது. கேப்டன் குருணல் பாண்ட்யா தனது தந்தை இறந்ததால் தொடரில் இருந்து பாதியில் விலகி விட்ட நிலையில் பொறுப்பு கேப்டன் கேதர் தேவ்தார் கேப்டன்ஷிப்பிலும், ரன் குவிப்பிலும் (7 ஆட்டத்தில் 333 ரன்) சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரையும், விஷ்ணு சோலங்கியையும் (218 ரன்) தான் அந்த அணி பேட்டிங்கில் கணிசமாக சார்ந்து இருக்கிறது. பந்து வீச்சில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் லுக்மேன் மெரிவாலா (14 விக்கெட்) மிரட்டுகிறார்.

வெற்றி வாய்ப்பில் பரோடாவுடன் ஒப்பிடும் போது தமிழக அணியின் கையே சற்று ஓங்கி நிற்கிறது என்று சொல்லலாம். இருப்பினும் 20 ஓவர் கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம். பரோடா அணி 3-வது முறையாக மகுடம் சூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story