ஆஸ்திரேலிய தொடரில் நிதானமாக ஆடியது ஏன்? புஜாரா விளக்கம்


ஆஸ்திரேலிய தொடரில் நிதானமாக ஆடியது ஏன்? புஜாரா விளக்கம்
x
தினத்தந்தி 31 Jan 2021 11:08 PM GMT (Updated: 1 Feb 2021 2:05 AM GMT)

ஆஸ்திரேலிய தொடரில் நிதானமாக ஆடியது ஏன்? என்று இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் புஜாரா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

புதுடெல்லி, 

2018-19-ம் ஆண்டிலும், சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரும் அணிக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் அருமையானதாகும். இந்த இரண்டு போட்டி தொடரிலும் நான் சிறப்பாக செயல்பட்டேன். ஆனால் இரண்டு போட்டி தொடருக்கான சூழ்நிலைகளும் முற்றிலும் மாறுபட்டதாகும். இந்த முறை கொரோனா பரவல் காரணமாக ஏறக்குறைய 8 மாத இடைவெளிக்கு பிறகு நான் இந்த தொடரில் ஆடினேன். அத்துடன் முதல் தர போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. எல்லா வீரர்களுக்கு எதிராகவும் வியூகம் அமைத்து செயல்படக்கூடிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி தொடருக்கு தயாராகுவது என்பது எளிதான காரியம் அல்ல. இந்த முறை நல்ல பார்முக்கு வர சற்று நேரம் பிடித்தது. ஆனாலும் அதிர்ஷ்டவசமாக எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ரன் எண்ணிக்கையை பார்க்கையில் எனக்கு இது மிகவும் நல்ல தொடர் போல் தெரியாது. ஆனால் பிட்ச்சை பார்க்கையில் இந்த முறை யாரும் அதிக ரன்கள் குவிக்கவில்லை. கடந்த முறையை விட இந்த போட்டி தொடர் கடும் சவால் நிறைந்ததாக இருந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. கடந்த இரண்டு ஆஸ்திரேலிய போட்டி தொடர்களையும் ஒப்பிடுவது கடினமானதாகும். ஆனாலும் இந்த தொடர் முந்தைய தொடரை விட சற்று சிறப்பானதாகும். கடந்த முறையை விட இந்த முறை நமது அணி வலு குறைந்ததாகும். அணியில் இளம் வீரர்கள் அதிகம் அங்கம் வகித்தனர். இருப்பினும் நான் இடம் பெற்றதில் இது தான் சிறந்த தொடர் என்று சொல்லமாட்டேன். கடந்த ஆஸ்திரேலிய தொடரும், கடந்த முறை (2017) சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலிய் அணிக்கு எதிரான தொடரும் மிகவும் கடினமானதாகும். ஒரு கால கட்டத்தில் எவ்வளவு ரன் எடுக்கிறோம் என்பதை விட எத்்தனை பந்துகளை எதிர்கொண்டு ஆடுகிறோம் என்பது முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஒவ்வொரு பேட்ஸ்மேன்களுக்கும் அணியில் ஒரு பணி இருக்கிறது. அதனை அணி நிர்வாகம் முழுமையாக புரிந்து இருக்கிறது. பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பொறுப்பு கேப்டன் ரஹானே ஆகியோரும் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்படி சொன்னார்கள். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவர்கள் சிறப்பாக பந்து வீசியதால் நிதானமாக ஆட வேண்டியதானது. இதனால் ரன் எடுக்க கூடுதல் நேரம் பிடித்தது. சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தான் எனது பேட்டிங் இருக்கும். ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமாக இருந்தால் அடித்து ஆடுவேன். மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்துக்குள் தொடர்ந்து இருந்து விளையாடுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஆஸ்திரேலிய தொடரில் தனிமைப்படுத்துதல் எல்லா வீரர்களுக்கும் கடினமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

புஜாரா 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் 1,258 பந்துகளை எதிர்கொண்டு 3 சதம் உள்பட 521 ரன்னும், சமீபத்தில் நடந்த தொடரில் 928 பந்துகளில் 3 அரைசதத்துடன் 271 ரன்னும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story