சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்: பரோடாவை வீழ்த்தி தமிழக அணி ‘சாம்பியன்’


சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்: பரோடாவை வீழ்த்தி தமிழக அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 31 Jan 2021 11:38 PM GMT (Updated: 1 Feb 2021 1:59 AM GMT)

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தமிழக அணி, பரோடாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஆமதாபாத்,

12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான தமிழ்நாடு-பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

‘டாஸ்’ ஜெயித்த தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பரோடா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தமிழக அணியினர் தொடக்கம் முதலே சுழற்பந்து வீச்சு மூலம் பரோடா அணிக்கு கடும் நெருக்கடி அளித்ததுடன், விக்கெட்டுகளையும் வேகமாக வீழ்த்தினார்கள். அந்த அணி 8.5 ஓவர்களில் 36 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரரும், பொறுப்பு கேப்டனுமான கேதர் தேவ்தார் 16 ரன்னில் ஆட்டம் இழந்தார். மற்ற 5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டினார்கள்.

இதனை அடுத்து அதித் ஷேத், விஷ்ணு சோலங்கியுடன் இணைந்தார். இருவரும் ஓரளவு நிலைத்து நின்று நிதானமாகவும், நேர்த்தியாகவும் அடித்து ஆடி அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார்கள். ஸ்கோர் 94 ரன்னை எட்டிய போது அதித் ஷேத் 29 ரன்னில் (30 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விஷ்ணு சோலங்கி (49 ரன்கள், 55 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி ஓவரில் ரன்-அவுட் ஆனார். 20 ஓவர்களில் பரோடா அணி 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. பார்கவ் பாத் 5 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

தமிழக அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டும், பாபா அபராஜித் ஒரு விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர்கள் சோனு யாதவ், எம்.முகமது தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய தமிழக அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் என். ஜெகதீசன் 14 ரன்னிலும், ஹரி நிஷாந்த் 35 ரன்னிலும், அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 22 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பாபா அபராஜித் 35 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 29 ரன்னும், பவுண்டரி அடித்து அணி வெற்றி இலக்கை கடக்க உதவிய ஷாருக்கான் 7 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 4 விக்கெட்டுகள் வீழ்த்திய தமிழக பவுலர் மணிமாறன் சித்தார்த் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

2007-ம் ஆண்டு சாம்பியனான தமிழக அணி 2-வது முறையாக சையத் முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டி தொடரில் தமிழக அணி லீக் உள்பட 8 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது.


Next Story