சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு


சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2021 1:03 AM GMT (Updated: 2 Feb 2021 1:03 AM GMT)

சென்னையில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை, 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 5 முதல் 9-ந் தேதி வரையும், 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 13 முதல் 17-ந் தேதி வரையும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

3-வது, 4-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் முறையே வருகிற 24-ந் தேதி மற்றும் மார்ச் 4-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்காக இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் ஏற்கனவே சென்னை வந்து விட்டனர்.

கட்டுப்பாட்டில் தளர்வு

கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு சென்னையில் நடைபெறும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எற்கனவே அறிவித்து இருந்தது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் இந்த மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாட்டில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படுவதாக நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவித்தது. இதில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளையாட்டு நிகழ்ச்சிகளில் (கிரிக்கெட் உள்பட) அதிகபட்சம் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்கள் அமர்ந்து பார்வையிட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ரசிகர்களுக்கு அனுமதி

இதனை தொடர்ந்து சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதனை அடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். இதில் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சென்னை டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீதம் அளவுக்கு ரசிகர்களை அனுமதிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டது.

ஆனால் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், அதற்கு முன்னதாக டிக்கெட் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து முடிப்பது முடியாத காரியம். இதனால் முதல் டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிப்பது இல்லை என்றும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீதம் ரசிகர்களை அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2-வது டெஸ்ட் போட்டியில் 40 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 20 ஆயிரம் வரை ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

50 சதவீதம்...

இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமியிடம் கேட்ட போது, ‘சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க போதிய காலஅவகாசம் இல்லை. எனவே முதலாவது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க முடியவில்லை. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினராக உள்ள 180 கிளப்களின் அங்கத்தினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். 2-வது டெஸ்ட் போட்டியில் 50 சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அதற்கான டிக்கெட் விற்பனை உள்ளிட்ட அனைத்து பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும். போட்டியை காண வரும் ரசிகர்கள் என்ன மாதிரியான கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி விரைவில் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார். 

Next Story