பரபரப்பான கட்டத்தில் ராவல்பிண்டி டெஸ்ட் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெறுமா?


பரபரப்பான கட்டத்தில் ராவல்பிண்டி டெஸ்ட் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெறுமா?
x
தினத்தந்தி 7 Feb 2021 11:21 PM GMT (Updated: 7 Feb 2021 11:21 PM GMT)

ராவல்பிண்டி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெறுமா? என இன்றைய கடைசி நாள் ஆட்டம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ராவல்பிண்டி,

பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 272 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 201 ரன்களும் எடுத்தன. 71 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 3-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 28 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

4-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 298 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தனது முதலாவது சதத்தை அடித்த முகமது ரிஸ்வான் 115 ரன்களுடன் (204 பந்து, 15 பவுண்டரி) கடைசி வரை களத்தில் இருந்தார். நமன் அலி 45 ரன் எடுத்தார். இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 370 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா ஆட்ட நேர முடிவில் 41 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ராம் 59 ரன்னுடனும், வான்டெர் துஸ்சென் 48 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு இன்னும் 243 ரன் மட்டுமே தேவைப்படுவதால் இன்றைய கடைசி நாள் ஆட்டம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்த இலக்கை தென்ஆப்பிரிக்கா எட்டினால் பாகிஸ்தான் மண்ணில் அது அதிகபட்ச ‘சேசிங்’காக இருக்கும்.

Next Story