இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
சென்னை,
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 161- ரன்களும் ரகானே 67- ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மோயின் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலந்து அணி, அஸ்வினின் மாயாஜால சுழலில் சிக்கியது. 59.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தது. 3- ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும் விராட் கோலி ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ரிஷப் பண்ட், ரகானே என முன்னணி வீரர்கள் வெளியேறியதால், இந்திய அணி 86- ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த அக்சர் படேலும் 7 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து 7-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய அஸ்வின், விராட் கோலிக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். குறிப்பாக அஸ்வின் துரிதமாக ரன் சேர்த்தார். விராட் கோலி, அஸ்வின் ஆகிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர். 65.4- ஓவர்கள் நிலவரப்படி இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது. விராட் கோலி 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அஸ்வின் 56 ரன்களுடனும் களத்தில் உள்ளார்'.
இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 397- ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.