இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணியில் 3 தமிழக வீரர்களுக்கு இடம்


இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணியில் 3 தமிழக வீரர்களுக்கு இடம்
x
தினத்தந்தி 21 Feb 2021 1:21 AM GMT (Updated: 21 Feb 2021 1:21 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் 3 தமிழக வீரர்கள் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

ஆமதாபாத், 

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந்தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

டெஸ்ட் தொடர் முடிந்ததும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் இதே சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

இந்த 20 ஓவர் தொடருக்கான இந்திய அணி நேற்று தேர்வு செய்து அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், சென்னையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இடத்தை தக்கவைத்துள்ளனர். 

காயத்தால் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகிய மற்றொரு தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி உடல்தகுதியை எட்டிவிட்டதால் அவரும் அணிக்கு அழைக்கப்பட்டு உள்ளார். கடந்த ஐ.பி.எல். தொடரில் கலக்கிய பேட்ஸ்மேன்கள் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஆல்-ரவுண்டர் ராகுல் திவேதியா முதல் முறையாக தேசிய அணிக்கு தேர்வாகியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மனிஷ் பாண்டே, மயங்க் அகர்வால், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோருக்கு இடமில்லை.

காயத்தில் இருந்து மீளாத ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

இந்திய 20 ஓவர் போட்டி அணி வருமாறு:-

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பண்ட், இஷான் கிஷன், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி, அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேதியா, நடராஜன், புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்.

Next Story