‘2 நாளிலேயே டெஸ்ட் போட்டி முடிந்தது வெட்கக்கேடானது’ - ஜோ ரூட்


‘2 நாளிலேயே டெஸ்ட் போட்டி முடிந்தது வெட்கக்கேடானது’ - ஜோ ரூட்
x
தினத்தந்தி 26 Feb 2021 11:46 PM GMT (Updated: 26 Feb 2021 11:46 PM GMT)

ஆமதாபாத் டெஸ்டில் படுதோல்வி அடைந்தது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆமதாபாத், 

இந்த ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உரிய தரத்துடன் இருந்ததா என்று கேட்கிறீர்கள். இது ஒரு நல்ல கேள்வி. ஆனால் பதில் அளிப்பது சிக்கலானது. ஆடுகளத்தில் முதல் நாளில் இருந்தே பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருந்தது. ஆடுகளம், போட்டிக்கு ஏற்ற வகையில் இருந்ததா? என்பதை வீரர்கள் முடிவு செய்ய முடியாது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முடிவை பொறுத்தது. வீரர்கள் என்ற முறையில் எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் அவ்வளவு தான்.

இந்த டெஸ்ட் 2 நாட்களுக்குள் முடிந்திருக்கக்கூடாது. அற்புதமான ஸ்டேடியத்தில் 2-வது நாளிலேயே போட்டி முடிந்தது உண்மையிலேயே வெட்கக்கேடானது. இரு அணியிலும் சிறந்த வீரர்கள் உள்ளனர். உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட் அரங்கில் மிகுந்த கவனத்தை ஈர்த்த இந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டியை காண 40 ஆயிரம் ரசிகர்கள் திரண்டு இருந்தனர். ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச் போன்றவர்களின் பந்து வீச்சை விராட் கோலி எப்படி எதிர்கொள்வார்?, அஸ்வினின் சுழல் தாக்குதலை பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட எங்களது பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்த்து ஆடுவார்கள்? என்பதை காணும் ஆவலுடன் வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டு விட்டனர். அவர்களுக்காக நான் வருந்துகிறேன்.

இவ்வாறு ஜோ ரூட் கூறினார்.

Next Story