கொரோனா பரவல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு


கொரோனா பரவல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 5 March 2021 5:59 PM GMT (Updated: 5 March 2021 5:59 PM GMT)

கொரோனா பரவல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சி,

கராச்சியில் 6-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற 2 வெளிநாட்டு வீரர்கள் முதலில் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்டனர். 

இதனை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் மேலும் 4 வீரர்கள், ஒரு உதவி பயிற்சியாளர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.

கொரோனா பரவல் எதிரொலியாக சில வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் இருந்து விலகி தங்களது சொந்த நாட்டுக்கு திரும்ப திட்டமிட்டனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த போட்டியை உடனடியாக தள்ளிவைப்பதாக நேற்று அறிவித்தது. 

கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டதாக கூறப்பட்ட போதும், வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு விஷயத்தில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

Next Story