உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்டனுக்கு மாற்றம் - ஐ.சி.சி. அறிவிப்பு


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்டனுக்கு மாற்றம் - ஐ.சி.சி. அறிவிப்பு
x
தினத்தந்தி 11 March 2021 12:41 AM GMT (Updated: 11 March 2021 12:41 AM GMT)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் இருந்து சவுத்தாம்டனுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

சவுத்தாம்டன், 

முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியாவும், நியூசிலாந்தும் தகுதி பெற்றுள்ளன. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முதலில் புகழ்பெற்ற லண்டன் லார்ட்சில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு சில நடைமுறை சிக்கல் காரணமாக இறுதிப்போட்டி லண்டனில் இருந்து சவுத்தாம்டனுக்கு மாற்றப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் ஜூன் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இங்கிலாந்து அரசு அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தினால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்கள் போட்டியை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஐ.சி.சி. கூறியுள்ளது.

சவுத்தாம்டனில் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் அமைத்து ஏற்கனவே டெஸ்ட் போட்டிகள் வெற்றிகரமாக நடந்துள்ளன. அத்துடன் மைதானத்தையொட்டியே வீரர்கள் தங்குவதற்குரிய ஓட்டல் அமைந்துள்ளது. இதனால் வெளியே அதிகமாக செல்வதை தவிர்க்க முடியும். இது போன்ற காரணங்களால் தான் ஆட்டம் லார்ட்சில் இருந்து சவுத்தாம்டனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக ஐ.சி.சி.யின் பொதுமேலாளர் ஜெப் ஆல்ட்ரைஸ் கூறுகையில், “ஹேம்ஷையர் பவுலில் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப் போட்டியைச் சிறப்பாக நடத்துவோம் என நம்புகிறேன். விளையாடும் வீரர்களும், பார்வையாளர்களும் பாதுகாப்பாக, நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும். இரு சிறந்த அணிகள் டெஸ்ட் இறுதிப் போட்டியில் விளையாடுவதை ரசிகர்கள் பார்த்து மகிழக் குறைவான அளவில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார். 

Next Story