இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி எளிதில் வெற்றி


இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி எளிதில் வெற்றி
x
தினத்தந்தி 12 March 2021 3:54 AM GMT (Updated: 12 March 2021 3:54 AM GMT)

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்தது.

ஆன்டிகுவா, 

வெஸ்ட்இண்டீஸ்- இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் ‘பேட்’ செய்த இலங்கை அணி 49 ஓவர்களில் 232 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் கருணாரத்னே (52 ரன்கள்), குணதிலகா (55 ரன்கள்) நல்ல அடித்தளம் ஏற்படுத்தி தந்த போதிலும் அடுத்து வந்த வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. பின்வரிசையில் ஆஷென் பண்டாரா (50 ரன்கள்) மட்டும் சற்று நிலைத்து ஆடினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். முன்னதாக தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார். 22-வது ஓவரில் பொல்லார்ட் பந்து வீச்சை தடுத்து ஆடி விட்டு ரன் எடுக்க ஓடிய குணதிலகா முடியாது என்று தெரிந்ததும் கிரீசுக்கு திரும்பினார். அப்போது பந்து அவரது காலில் பட்டு நகர்ந்தது. குணதிலகா பந்தை வேண்டுமென்றே காலால் தட்டிவிட்டதால் தன்னால் ‘ரன்-அவுட்’ செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அவரை ‘அவுட்’ என அறிவிக்க வேண்டும் என்று பொல்லார்ட் நடுவரிடம் முறையிட்டார். இதையடுத்து 3-வது நடுவரிடம் ஆலோசித்த நடுவர் பீல்டிங்குக்கு இடையூறு செய்யும் விதத்தில் செயல்பட்டதாக கூறி குணதிலகா ஆட்டம் இழந்ததாக அறிவித்தார். இது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது.

தொடர்ந்து ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 47 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் இவின் லீவிஸ் 65 ரன்னும், 10-வது சதத்தை எட்டிய ஷாய் ஹோப் 110 ரன்னும் எடுத்து அணியின் வெற்றி வாய்ப்பை எளிதாக்கினர். டேரன் பிராவோ 37 ரன்னுடனும், ஜாசன் முகமது 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.

Next Story