இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது


இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 12 March 2021 4:08 AM GMT (Updated: 12 March 2021 4:08 AM GMT)

இந்தியா- இங்கிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது.

ஆமதாபாத், 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்த 5 ஆட்டங்களும் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மார்ச்.12, 14, 16, 18, 20 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதால் பல இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டு ஒரே இடத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் அமைத்து போட்டி நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) அரங்கேறுகிறது. இதையொட்டி சில தினங்களாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

தவானுக்கு இடமில்லை

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்ற உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல் இறங்குவார் என்பதை இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று பேட்டியின் போது தெளிவுப்படுத்தினார். இப்போதைக்கு ஷிகர் தவான் 3-வது தொடக்க ஆட்டக்காராக இருப்பார் என்றும் கூறியுள்ளார். இதனால் வாய்ப்புக்காக தவான் காத்திருக்க வேண்டியது தான்.

டெஸ்ட் தொடரில் அதிரடி காட்டிய ரிஷாப் பண்ட் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதுகில் காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட பிறகு அரிதாக பந்து வீசிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்த தொடரில் பந்து வீசுவதற்கு முழுமையாக ஆயத்தமாகியுள்ளார். இது இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும். காயத்தால் ஓராண்டுக்கு மேலாக ஒதுங்கி இருந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் அணிக்கு திரும்பியிருக்கிறார். அதே சமயம் தோள்பட்டை காயத்தில் இருந்து இன்னும் மீளாத தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் முதலாவது ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை.

சாதனையை நோக்கி கோலி

இந்த ஆண்டின் இறுதியில் இ்ந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாகவே இந்த தொடர் பார்க்கப்படுகிறது. உலக கோப்பை போட்டிக்கு சரியான வீரர்களை அடையாளம் காண்பதற்கு இந்த தொடர் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஐ.பி.எல். போட்டியில் அமர்க்களப்படுத்திய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் திவேதியா ஆகியோர் புதுமுகங்களாக அழைக்கப்பட்டுள்ளனர். முதல் ஆட்டத்தில் இவர்களுக்கு இடம் கிடைக்காது என்றாலும் இந்த தொடரில் ஏதாவது ஒரு கட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

டெஸ்ட் தொடரில் பெரிய அளவில் ஜொலிக்காத கேப்டன் விராட் கோலி 20 ஓவர் போட்டியிலாவது ரன்மழை பொழிவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். அவர் இன்னும் 72 ரன்கள் சேர்த்தால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 3 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சிறப்பை பெறுவார்.

இங்கிலாந்து எப்படி?

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 20 ஓவர் போட்டியில் பலம் வாய்ந்தது. தரவரிசையில் நம்பர் ஒன் இடம் வகிக்கும் அந்த அணியில் மோர்கன், டேவிட் மலான், பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜாசன் ராய் என்று அதிரடி பட்டாளத்துக்கு குறைவு கிடையாது. இதனால் 20 ஓவர் போட்டியில் அனல் பறக்கும் என்று நம்பலாம். ஆடுகளத்தில் சுழல் தாக்கமும் ஓரளவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் இந்தியாவும், 7-ல் இங்கிலாந்தும் வெற்றி கண்டுள்ளன. கடைசியாக சந்தித்த 5 ஆட்டங்களில் 4-ல் இ்ந்தியா வெற்றி பெற்றிருக்கிறது.

இரவு 7 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இ்ந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் அல்லது நவ்தீப் சைனி.

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், ஜோப்ரா ஆர்ச்சர் அல்லது மார்க்வுட், அடில் ரஷித்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு மோர்கன் புகழாரம்

இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடியதன் மூலம் நாங்கள் மிகவும் பலன் அடைந்திருக்கிறோம். 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை வெல்வதற்கு முன்பாக ஐ.பி.எல். போட்டியில் ஆடியது எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவிகரமாக இருந்தது. அதற்காக ஐ.பி.எல். போட்டிக்கு நன்றி. அடுத்தடுத்து நடக்க உள்ள இரண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளும் ஐ.பி.எல். முடிந்த பிறகே வருகின்றன. அதனால் உலகின் மிகப்பெரிய இந்த 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து பங்கேற்று அதன் மூலம் அனுபவத்தையும், நம்பிக்கையையும் உலக கோப்பை போட்டிக்கு எடுத்துக் செல்வோம். ஐ.பி.எல்.-ல் ஆடுவதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது’ என்றார்.

Next Story