இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி


இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி
x
தினத்தந்தி 15 March 2021 8:14 PM GMT (Updated: 15 March 2021 8:14 PM GMT)

இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

ஆன்டிகுவா, 

வெஸ்ட்இண்டீஸ்-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் ‘பேட்’ செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. ஆஷென் பண்டாரா 55 ரன்னும் (74 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), டி சில்வா 80 ரன்னும் (60 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின்னர் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ் 13 ரன்னிலும், அடுத்து களம் கண்ட ஜாசன் முகமது 8 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

வெஸ்ட்இண்டீஸ் வெற்றி

இதைத்தொடர்ந்து டேரன் பிராவோ, தொடக்க வீரர் ஷாய் ஹோப்புடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 19-வது அரைசதத்தை கடந்த ஷாய் ஹோப் 64 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக 6-வது முறையாக 50 மற்றும் அதற்கு அதிகமாக ரன்கள் குவித்துள்ளார். 3-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்-டேரன் பிராவோ ஜோடி 109 ரன்கள் திரட்டியது. சிறப்பாக ஆடி 130 பந்துகளில் 4-வது சதத்தை எட்டிய டேரன் பிராவோ 102 ரன்னில் (132 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். ஒருநாள் போட்டியில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

48.3 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய கேப்டன் பொல்லார்ட் 42 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 53 ரன்னும், ஜாசன் ஹோல்டர் 10 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் டேரன் பிராவோ ஆட்டநாயகன் விருதையும், ஷாய் ஹோப் தொடர்நாயகன் விருதையும் தனதாக்கினர்.

டெஸ்ட் தொடர்

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. முன்னதாக நடந்த 20 ஓவர் தொடரை அந்த அணி 2-1 என்ற கணக்கில் வென்று இருந்தது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. 

Next Story