ஐ.பி.எல். போட்டி நடக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இல்லை - இந்திய கிரிக்கெட் வாரியம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 March 2021 8:54 PM GMT (Updated: 21 March 2021 8:54 PM GMT)

ஐ.பி.எல். போட்டி நடக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மும்பை, 

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை இந்தியாவில் 6 நகரங்களில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறது. தங்கள் அணியில் உள்ள இந்திய வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் சமீபத்தில் வலியுறுத்தியது. 

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டித் தொடரின் போது எந்த அணி வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இல்லை என்று 8 அணிகளின் நிர்வாகங்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரியப்படுத்தியுள்ளது.

போட்டிக்கு முன்பாக வீரர்கள் 7 நாட்கள் கட்டாயம் ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்துதலின் போது 3 நாட்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். வீரர் யாருக்காவது கொரோனா பாதிப்பு தென்பட்டால் குறைந்தது 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் இ்ந்திய வீரர்கள் ஏற்கனவே கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை. நேரடியாக தங்களது ஐ.பி.எல். அணியுடன் இணைந்து கொள்ளலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை உன்னிப்பாக கண்காணிக்க சிறப்பு மேலாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

Next Story