வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் நியூசிலாந்து வெற்றி


வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் நியூசிலாந்து வெற்றி
x
தினத்தந்தி 30 March 2021 7:00 PM GMT (Updated: 30 March 2021 7:00 PM GMT)

வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் நியூசிலாந்து வெற்றி மழையால் இலக்கை நிர்ணயிப்பதில் குழப்பம்.

நேப்பியர், 

நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் அவர்களது இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளப்பட்டது. அதிகபட்சமாக கிளைன் பிலிப்ஸ் 58 ரன்கள் (31 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

பின்னர் ‘டக்வொர்த்-லீவிஸ்’ விதிப்படி இலக்கை நிர்ணப்பதில் குழப்பம் ஏற்பட்டது. வங்காளதேசத்துக்கு 16 ஓவர்களில் 148 ரன்கள் தேவை என்று முதலில் கூறப்பட்டது. இதை நோக்கி ஆடிய போது, 2-வது ஓவரின் போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இலக்கு விஷயத்தில் தவறு இருப்பதாக கூறிய போட்டி நடுவர், 16 ஓவர்களில் 170 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கை திருத்தி அறிவித்தார். சிறிது நேரத்தில் 170 அல்ல; 171 ரன் என்று மாற்றப்பட்டது. இந்த குளறுபடிக்கு மத்தியில் தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணியால் நி்ாணயிக்கப்பட்ட 16 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சவுமியா சர்கார் 27 பந்தில் 51 ரன்கள் (5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசியும் பலன் இல்லை. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் நாளை நடக்கிறது.

Next Story