மைதான ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா: ஐ.பி.எல். கிரிக்கெட் மும்பையில் நடைபெறுவதில் சிக்கல்


மும்பை வான்கடே ஸ்டேடியம்
x
மும்பை வான்கடே ஸ்டேடியம்
தினத்தந்தி 3 April 2021 11:08 PM GMT (Updated: 3 April 2021 11:08 PM GMT)

வான்கடே மைதான ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் மும்பையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மைதான ஊழியர்கள் பாதிப்பு

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மும்பையில் மட்டும் 10 லீக் ஆட்டங்கள் வருகிற 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இங்கு 10-ந் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். போட்டிக்காக மும்பை வான்கடே மைதானம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. ஏற்கனவே வீரர்கள் நிதிஷ் ராணா, அக்‌ஷர் பட்டேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது போட்டி நடக்க இருக்கும் வான்கடே மைதான ஊழியர்கள் 10 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. அத்துடன் ஐ.பி.எல். போட்டி அமைப்பு குழுவில் இடம் பெற்று பல்வேறு பணிகளை கவனித்து வந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 7 உறுப்பினர்களும் கொரோனாவில் சிக்கி உள்ளனர்.

ஐ.பி.எல். போட்டிக்கு சிக்கல்

இன்னொரு பக்கம், மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. தினசரி சுமார் 50 ஆயிரம் பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக மும்பையில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இதனால் மும்பையில் திட்டமிட்டபடி ஐ.பி.எல். ஆட்டங்கள் அரங்கேறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை மும்பையில் போட்டியை நடத்த முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால் அதனை சமாளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. மும்பைக்கு பதிலாக ஐதராபாத், இந்தூர் மைதானங்கள் மாற்று இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

நடத்த முடியும்

இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில் ‘ஐ.பி.எல். போட்டி தொடங்க மிகவும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில் மும்பையில் நடைபெற வேண்டிய ஆட்டங்களை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றுவது என்பது எளிதான காரியம் கிடையாது. மும்பையில் ஊரடங்கு உத்தரவு ஒருவேளை பிறப்பிக்கப்பட்டால் கூட அணியினர் ஏற்கனவே கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பதாலும், ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்பதாலும் போட்டியை மும்பையில் திட்டமிட்டபடி நடத்த முடியும் என்று நம்புகிறோம்’ என்றார்.

இதற்கிடையே ஐ.பி.எல். போட்டி நடைபெறும் அனைத்து மைதானங்களையும் உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம் கொரோனா தடுப்பு நடைமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்களை மீண்டும் அறிவுறுத்தி இருக்கிறது.


Next Story