பஹர் ஜமான் ‘ரன்-அவுட்’ சர்ச்சை: விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?


பஹர் ஜமான் ‘ரன்-அவுட்’ சர்ச்சை: விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
x
தினத்தந்தி 6 April 2021 6:45 PM GMT (Updated: 6 April 2021 4:36 PM GMT)

பஹர் ஜமான் ‘ரன்-அவுட்’ சர்ச்சையில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஜோகன்னஸ்பர்க், 

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தை அடித்து விட்டு 2-வது ரன்னுக்காக ஓடுகையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமான் (193 ரன்கள்) தென்ஆப்பிரிக்க வீரர் மார்க் ராமால் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டார். இந்த ‘ரன்-அவுட்’ கடும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அதாவது பஹர் ஜமானின் கவனத்தை திசை திருப்பும் வகையில் தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் செயல்பட்டதே ரன்-அவுட்டுக்கு காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.

எதிர்முனை ஸ்டம்பின் அருகில் நின்ற பந்து வீச்சாளர் நிகிடியை நோக்கி பந்தை எறியும்படி குயின்டான் டி காக் சைகை காட்டியதால் பஹர் ஜமான் பந்து தன்பக்கம் வரவில்லை என்று நினைத்து ஓட்ட வேகத்தை குறைத்ததுடன், மறுமுனையில் நின்ற பேட்ஸ்மேன் ஹாரிஸ் ராவுப்பை திரும்பி பார்த்தார். ஆனால் பீல்டர் வீசிய பந்து விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் நின்ற ஸ்டம்பை நேராக தாக்கியது. ‘ரன்-அவுட்’ விஷயத்தில் விளையாட்டு உத்வேகத்துக்கு எதிராக செயல்பட்ட டி காக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் நடுவர்கள் தான் முடிவு செய்ய முடியும் என்று போட்டிக்கான விதியை உருவாக்கும் மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் தெரிவித்துள்ளது.

Next Story