ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 10 April 2021 1:08 AM GMT (Updated: 10 April 2021 1:08 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை, 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. போட்டியின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கடந்த ஆண்டு அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதிலாக 23 வயது விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கேப்டனாக முதல்முறையாக கால் பதிக்கிறார்.

டெல்லி அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு திடமாக உள்ளது. பேட்டிங்கில் கடந்த சீசனில் ரன் குவிப்பில் 2-வது இடம் பிடித்த ஷிகர் தவான் (618 ரன்), அண்மையில் நடந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 827 ரன்கள் சேர்த்து மலைக்க வைத்த பிரித்வி ஷா மற்றும் ரஹானே, ஸ்டீவன் சுமித், அதிரடியில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை படைத்த ரிஷாப் பண்ட் என்று பெரும் பட்டாளமே இருக்கிறது.

வேகப்பந்து வீச்சில் கடந்த முறை கலக்கிய அன்ரிச் நோர்டியா, காஜிசோ ரபடா ஆகியோர் கடந்த 6-ந் தேதி தான் அணியின் முகாமில் இணைந்தனர். அவர்களது தனிமைப்படுத்துதல் நாட்கள் இன்னும் முடிவடையாததால் இன்றைய ஆட்டத்தில் ஆடமுடியாது. அவர்கள் இல்லாத குறையை வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், கிறிஸ்வோக்ஸ் உள்ளிட்டோர் போக்குவார்கள் எனலாம். சுழற்பந்து வீச்சில் ஆர்.அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோர் வலுசேர்ப்பார்கள். கொரோனா பாதிப்பில் சிக்கிய அக்‌ஷர் பட்டேல் அணியில் இடம் பெற இயலாது.

இந்த போட்டி குறித்து டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட் கூறுகையில், ‘அணியின் சீனியர் வீரர்களான ஷிகர் தவான், அஸ்வின், ரஹானே ஆகியோருடன் கலந்து ஆலோசித்து பீல்டிங் உள்ளிட்ட வியூகம் அமைப்பதில் முடிவு மேற்கொள்வேன்’ என்றார்.

3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறாமல் போனதுடன் 7-வது இடத்துக்கும் தள்ளப்பட்டது. அந்த கசப்பான அனுபவத்தில் இருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது.

கடந்த சீசனில் கடைசி நேரத்தில் விலகி சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் ரெய்னா மீண்டும் திரும்பி இருப்பது சென்னை அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும். அத்துடன் ராபின் உத்தப்பா, டுபிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, கேப்டன் டோனி, சாம் கர்ரன் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடியவர்கள். பந்து வீச்சில் ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், கைவிரல் காயத்தில் இருந்து குணமடைந்து வந்துள்ள ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தும் வேட்கையில் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் நிகிடி தாமதமாக அணியினருடன் இணைந்ததால் முதலாவது ஆட்டத்தில் ஆட முடியாது.

ஆனாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி விட்ட டோனி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகியோர் போட்டிகளில் தொடர்ந்து ஆடாததால் ஏற்பட்டு இருக்கும் தொய்வை எப்படி சமாளித்து களத்தில் ஜொலிக்கப் போகிறார்கள் என்பது மிகுந்த எதிர்பார்ப்புக்கு ஆளாகி இருக்கிறது.

முதல்முறையாக கோப்பையை உச்சி முகர வேண்டும் என்ற உத்வேகத்துடன் களம் காணும் டெல்லி அணியும், இழந்த கம்பீரத்தை மீட்கும் முனைப்புடன் தயாராகி இருக்கும் சென்னை அணியும் போட்டியை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைவிருக்காது. அத்துடன் இளம் விக்கெட் கீப்பர், அனுபவ விக்கெட் கீப்பர் கேப்டன்களாக நேருக்கு நேர் சந்திப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 15 முறையும், டெல்லி அணி 8 தடவையும் வென்று இருக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ்: மொயீன் அலி அல்லது ருதுராஜ் கெய்க்வாட், பாப் டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், வெய்ன் பிராவோ, கிருஷ்ணப்பா கவுதம், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவன் சுமித், ரிஷாப் பண்ட் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், ஆர்.அஸ்வின், உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, இஷாந்த் ஷர்மா.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story