ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி - டெல்லியிடம் பணிந்தது


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி - டெல்லியிடம் பணிந்தது
x
தினத்தந்தி 11 April 2021 4:05 AM GMT (Updated: 11 April 2021 4:05 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் டெல்லியிடம் பணிந்தது.

மும்பை, 

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தியாவில் 6 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றை எட்டும்.

இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்தித்தது. டெல்லி அணியில் ஸ்டீவன் சுமித்துக்கு இடம் கிடைக்கவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணியின் புதிய கேப்டன் ரிஷாப் பண்ட் முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார்.

இதன்படி பாப் டு பிளிஸ்சிஸ்சும், ருதுராஜ் கெய்க்வாட்டும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். சென்னை அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. பிளிஸ்சிஸ் (0) வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முந்தைய சீசனில் கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் (5 ரன்) கிறிஸ்வோக்சின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற தவானிடம் பிடிபட்டார்.

இதன் பின்னர் மொயீன் அலியும், சுரேஷ் ரெய்னாவும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்துவதில் கவனம் செலுத்தினர். குறிப்பாக அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோரின் சுழற்பந்து வீச்சை நொறுக்கினர். அஸ்வினின் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர் விரட்டிய மொயீன் அலி (36 ரன், 24 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) அடுத்த பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயற்சித்து கேட்ச் ஆகிப்போனார். அதே ஓவரில் ரெய்னாவும் ஒரு சிக்சர் பறக்க விட்டார். மிஸ்ராவின் சுழலிலும் இரண்டு சிக்சர்களை தூக்கினார். மொயீன் அலியின் வெளியேற்றத்துக்கு பிறகு வந்த அம்பத்தி ராயுடும் மிடில் ஓவர்களில் ரெய்னாவுக்கு நன்கு ஒத்துழைப்பு தந்தார். சென்னை அணி 12.1 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரை தவற விட்ட ரெய்னா இந்த சீசனில் முதல் ஆட்டத்திலேயே அமர்க்களப்படுத்தி விட்டார். 32 பந்துகளில் தனது 39-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

இதற்கிடையே அம்பத்திராயுடு 23 ரன்களில் (16 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். முக்கியமான கட்டத்தில் சுரேஷ் ரெய்னா (54 ரன், 36 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) தேவையில்லாமல் 2-வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன்-அவுட் ஆனார்.

இதைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட கேப்டன் டோனி (0) டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவேஷ்கான் ஆப்-சைடில் வீசிய பந்தை அவர் ஓங்கி அடித்த போது அது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது.

இறுதி கட்டத்தில் ஆல்-ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோர் கூட்டணி போட்டு ரன்வேகத்தை சரியவிடாமல் பார்த்துக் கொண்டனர். 19-வது ஓவரை வீசிய டாம் கர்ரனின் பந்து வீச்சில் சாம் கர்ரன் 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் தெறிக்க விட்டார். சாம் கர்ரனின் அண்ணன் தான் டாம் கர்ரன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி பந்தில் சாம் கர்ரன் (34 ரன், 15 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கிளீன் போல்டு ஆனார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. ஜடேஜா 26 ரன்களுடன் (17 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். டெல்லி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், அவேஷ்கான் தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின், டாம் கர்ரன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 189 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், பிரித்வி ஷாவும் மின்னல் வேகத்தில் மட்டையை சுழட்டி பதிலடி கொடுத்தனர். சென்னை பந்து வீச்சை சிரமின்றி எதிர்கொண்ட இவர்கள் ஷர்துல் தாகூரின் ஒரே ஓவரில் 4 பவுண்டரி சாத்தினர். வலுவான அஸ்திவாரம் ஏற்படுத்தி தந்த இவர்கள் ‘பவர்-பிளே’ யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து அவர்களின் ரன்வேட்டை நீடித்தது. 39 மற்றும் 47 ரன்னில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த பிரித்வி ஷா அரைசதம் அடித்தார். தவான் தனது 42-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேகரித்த இந்த ஜோடியை ஒரு வழியாக வெய்ன் பிராவோ பிரித்தார். பிரித்வி ஷா 72 ரன்களில் (38 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். தவான் தனது பங்குக்கு 85 ரன்கள் (54 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி எல்.பி.டபிள்யூ.வில் சிக்கினார். ஆனாலும் டெல்லியின் வெற்றிப்பயணத்துக்கு ஆபத்தில்லை. அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 14 ரன்னில் அவுட் ஆனார்.

டெல்லி அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 190 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரிஷாப் பண்ட் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரை தோல்வியுடன் தொடங்கியுள்ள சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் வருகிற 16-ந்தேதி பஞ்சாப் கிங்சுடன் மோதுகிறது.

Next Story