ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது ஐதராபாத்


ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா அணியிடம் வீழ்ந்தது ஐதராபாத்
x
தினத்தந்தி 12 April 2021 1:18 AM GMT (Updated: 12 April 2021 1:18 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி வீழ்ந்தது.

சென்னை,

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் இன்றி இந்தியாவில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதையடுத்து கொல்கத்தா அணியின் இன்னிங்சை நிதிஷ் ராணாவும், சுப்மான் கில்லும் பவுண்டரியுடன் அமர்க்களமாக தொடங்கினர். சந்தீப் ஷர்மாவின் ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓட விட்ட நிதிஷ் ராணா தொடர்ந்து வேகம் காட்டினார். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்தனர். பிரதான சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வந்ததும் இந்த ஜோடி பிரிந்தது. அவரது பந்து வீச்சில் சுப்மான் கில் (15 ரன்) போல்டு ஆனார். ரஷித்கான் ஒரு பக்கம் ரன்ரேட்டை ஓரளவு கட்டுப்படுத்தினாலும் மற்ற பவுலர்களின் பந்து வீச்சை ராணா நொறுக்கித்தள்ளினார். 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய ராகுல் திரிபாதியின் மட்டையும் பந்துகளை நாலாபுறமும் தெறிக்க விட்டது. புவனேஷ்வர்குமாரின் ஒரே ஓவரில் இருவரும் சேர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 19 ரன்கள் திரட்டினர்.

தனது முதல் 2 ஓவர்களில் 21 ரன்களை வாரிவழங்கிய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் தனது 3-வது ஓவரில் இந்த கூட்டணியை உடைத்தார். ஸ்கோர் 146 ரன்களாக (15.2 ஓவர்) உயர்ந்த போது திரிபாதி 53 ரன்களில் (29 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் ராணா தனது பங்குக்கு 80 ரன்கள் (56 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதற்கிடையே ஆந்த்ரே ரஸ்செல் (5 ரன்) ரஷித்தின் சுழலில் சிக்கினார். கடைசி கட்டத்தில் கேப்டன் இயான் மோர்கன் 2 ரன்னிலும், ஷகிப் அல்-ஹசன் 3 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.

20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 22 ரன்களுடன் (9 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். ஐதராபாத் தரப்பில் ரஷித்கான், முகமது நபி தலா 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார், டி.நடராஜன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 188 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான வார்னர், மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் வீசிய முதல் ஓவரில் வழங்கிய கேட்ச் வாய்ப்பை கம்மின்ஸ் வீணடித்தார். ஆனாலும் வார்னர் (3 ரன்) நிலைக்கவில்லை. அவர் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் விருத்திமான் சஹாவும் (7 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

இதன் பின்னர் மனிஷ் பாண்டேவும், ஜானி பேர்ஸ்டோவும் கைகோர்த்து அணியின் சரிவை தடுத்து நிறுத்தினர். இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தனர். பேர்ஸ்டோ 55 ரன்களில் (40 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினார். ரன் தேவை அதிகரித்து கொண்டே போனதால் ஐதராபாத் தொடர்ந்து நெருக்கடிக்கு மத்தியிலேயே ஆடியது. முகமது நபி (14 ரன்), விஜய் சங்கர் (11 ரன்) சீக்கிரம் நடையை கட்டினர்.

கடைசி ஓவரில் ஐதராபாத்தின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை கட்டுக்கோப்புடன் வீசிய ஆந்த்ரே ரஸ்செல் 11 ரன் மட்டுமே வழங்கி தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

20 ஓவர்களில் ஐதராபாத் அணியால் 5 விக்கெட்டுக்கு 177 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 10 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது. மனிஷ் பாண்டே 61 ரன்களுடனும் (44 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), அப்துல் சமாத் 19 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

கொல்கத்தா தரப்பில் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும், ஷகிப்அல்-ஹசன், கம்மின்ஸ், ரஸ்செல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Next Story