ஒரு ரன் ஓட மறுத்து கடைசி பந்தை சந்திக்க சாம்சன் எடுத்த முடிவு சரிதான்; ராஜஸ்தான் அணி இயக்குனர் சங்கக்கரா பேட்டி


ஒரு ரன் ஓட மறுத்து கடைசி பந்தை சந்திக்க சாம்சன் எடுத்த முடிவு சரிதான்; ராஜஸ்தான் அணி இயக்குனர் சங்கக்கரா பேட்டி
x
தினத்தந்தி 13 April 2021 11:17 PM GMT (Updated: 13 April 2021 11:17 PM GMT)

ஒரு ரன் ஓட மறுத்து கடைசி பந்தை சந்திக்க சஞ்சு சாம்சன் எடுத்த முடிவு சரிதான் என்று ராஜஸ்தான் அணியின் இயக்குனர் சங்கக்கரா தெரிவித்தார்.

பஞ்சாப் அணி வெற்றி

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 91 ரன்னும், தீபக் ஹூடா 64 ரன்னும், கிறிஸ் கெய்ல் 40 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுக்கு 217 ரன்களே எடுத்தது. கடைசி பந்தில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 5 ரன் தேவை என்ற நிலையில் சிக்சர் அடிக்க முயன்ற கேப்டன் சஞ்சு சாம்சன் (119 ரன்கள், 63 பந்து, 12 பவுண்டரி, 7 சிக்சர்) பவுண்டரி எல்லை அருகில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்ததால் அந்த அணியின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது. ஐ.பி.எல். தொடரில் கேப்டனாக களம் கண்ட முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து சாதனை படைத்த சாம்சனின் அதிரடி அணியின் வெற்றிக்கு உதவவில்லை. அவர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ராகுல் கருத்து

வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் இதயத் துடிப்பு எகிறியது. ஆனாலும் எங்களது நம்பிக்கை குறையவில்லை. ஒன்றிரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக திரும்பும் என்பது தெரியும். 11-வது ஓவர் வரை எங்களது பந்து வீச்சு நன்றாகவே இருந்தது. நான் உள்பட எங்கள் அணியினர் சில நல்ல கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டதால் தான் ஆட்டம் இந்த அளவுக்கு கடைசி வரை நீடித்தது. இதுபோன்று கடைசி வரை போராடுவது எங்களுக்கு புதிதல்ல. இது எங்களுக்கு பழகிப்போய் விட்டது. இதுபோன்ற ஒரு வெற்றி அணியை ஒன்றாக இணைக்கிறது.

எங்கள் அணியில் திறமை வாய்ந்த ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும். தீபக் ஹூடாவின் ஆட்டம் அருமையாக இருந்தது. இதுபோன்ற அச்சமற்ற பேட்டிங்கை பார்க்க தான் நாங்கள் விரும்புகிறோம். அணியின் எதிர்பார்ப்பை புரிந்து அதற்கேற்ப வீரர்கள் செயல்படுவதை பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது. முக்கியமான ஓவர்களில் எப்போதும் அர்ஷ்தீப் சிங்கை தான் பந்து வீச அழைப்பேன். ஏனெனில் அவர் இதுபோன்ற நெருக்கடியான சவால்களை எதிர்கொள்வதில் ஆர்வம் உடையவர். அவர் தனது திறமையை நம்புவதுடன் தன்னம்பிக்கையுடனும் செயல்படக்கூடியவர். இதனால் அவர் சிறப்பாக செயல்படுகிறார்’ என்று தெரிவித்தார்.

சாம்சன் சொல்வது என்ன?

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் ‘மிகவும் நெருக்கமான இந்த ஆட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியை சந்தித்துள்ளோம். இது குறித்து விவரிக்க வார்த்தையில்லை. இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியும் என்று நினைக்கவில்லை. கடைசி பந்தை சரியாக தான் அடித்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக பந்து எல்லைக்கோட்டை கடக்கவில்லை. பவுலர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது ஆட்டத்தில் நடக்கக்கூடிய ஒன்று தான். தோல்வியை தவிர்த்து பார்த்தால் மற்றபடி எங்கள் அணியின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது. எனது இன்னிங்சில் 2-வது பாதியை என்னுடய வாழ்க்கையில் சிறந்த ஆட்டமாக கருதுகிறேன்’ என்றார்.

சரியான முடிவு

கடைசி ஓவரில் 5-வது பந்தில் சஞ்சு சாம்சன் ஒரு ரன் எடுக்க வாய்ப்பு கிடைத்தது. எதிர்முனையில் நின்ற கிறிஸ் மோரிஸ் ரன் எடுக்க வேகமாக ஓடினார். ஆனால் கடைசி பந்தை தானே எதிர்கொள்ள நினைத்த சஞ்சு சாம்சன் ஒரு ரன்னுக்கு ஓட மறுத்ததுடன், மோரிசை திரும்பி போகச் செய்தார். இதனால் மோரிஸ் அதிருப்தி அடைந்தார். இது குறித்து ராஜஸ்தான் அணியின் இயக்குனர் குமார் சங்கக்கராவிடம் கேட்ட போது, ‘தன்னால் அணிக்கு வெற்றி தேடிக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் சஞ்சு சாம்சன் செயல்பட்டார். ஆனால் நெருங்கி வந்து முடியாமல் போய்விட்டது. அவர் அடித்த கடைசி பந்து சில மீட்டர் தூரம் குறைவாக சென்று விட்டது. இதுபோல் நடக்க தான் செய்யும். அடுத்த முறை சாம்சன் இதை விட கூடுதலாக 10 மீட்டர் தூரம் பந்தை விரட்டியடித்து எங்களுக்கு வெற்றி தேடித்தருவார் என்று நம்புகிறேன். பந்தை நன்றாக அடித்து நல்ல பார்மில் இருக்கும் போது இந்த மாதிரி முடிவு எடுப்பது (கடைசி பந்தை சாம்சன் சந்திப்பு) சரிதான்’ என்றார்.


Next Story