ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி; கொல்கத்தாவை சாய்த்தது


ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றி; கொல்கத்தாவை சாய்த்தது
x
தினத்தந்தி 13 April 2021 11:26 PM GMT (Updated: 13 April 2021 11:26 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட்

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் தற்போது நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 5-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது. மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக கிறிஸ் லின் நீக்கப்பட்டு குயின்டான் டி காக் சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் மோர்கன் தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

சுழல் தாக்குதல்

இதன்படி விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கும், கேப்டன் ரோகித் சர்மாவும் மும்பை அணியின் இன்னிங்சை தொடங்கினர். வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் முதல் 5 ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன்சிங், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல்-ஹசன் ஆகியோரை மோர்கன் பயன்படுத்தினார். அதற்கு பலன் கிடைக்காமலும் இல்லை. டி காக் (2 ரன்), வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டினார். ஹர்பஜன்சிங்கின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி ஓடவிட்டார். இதே போல் பிரசித் கிருஷ்ணாவின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டினார். கம்மின்சின் பந்து வீச்சில் சிக்சருடன் அரைசதத்தை நிறைவு செய்தார். சூர்யகுமார் களத்தில் நின்றது வரை மும்பையின் ஸ்கோர் 180 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் அவர் வீழ்ந்ததும் நிலைமை தலைகீழானது. அணியின் ஸ்கோர் 86 ரன்களாக (10.3 ஓவர்) உயர்ந்த போது சூர்யகுமார் யாதவ் 56 ரன்களில் (36 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஷகிப்பின் சுழலில் சிக்கினார்.

ரஸ்செல் மிரட்டல்

அடுத்து வந்த இஷான் கிஷன் (1 ரன்) ரன்ரேட்டை அதிகப்படுத்தும் நோக்கில் அவசரகதியில் விளையாடி விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்களில் (32 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கம்மின்சின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா (15 ரன்), பொல்லார்ட் (5 ரன்) அடுத்தடுத்து வெளியேற ரன்வேகம் வெகுவாக தளர்ந்தது. இறுதிகட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஆந்த்ரே ரஸ்செல் அவர்களை அச்சுறுத்தினார். கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்து ஒரு வழியாக 150 ரன்களை தொட வைத்த குருணல் பாண்ட்யா (15 ரன்) அதே ஓவரில் கேட்ச் ஆனார்.

20 ஓவர்களில் மும்பை அணி 152 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. கடைசி 5 ஓவர்களில் அந்த அணி 38 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை தாரைவார்த்தது கவனிக்கத்தக்கது. கொல்கத்தா தரப்பில் ஆந்த்ரே ரஸ்செல் 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல்-ஹசன், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

நிமிர்ந்து சரிந்த கொல்கத்தா

பின்னர் 153 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணிக்கு நிதிஷ் ராணாவும், சுப்மான் கில்லும் 72 ரன்கள் (8.5 ஓவர்) திரட்டி வலுவான அடித்தளம் அமைத்து தந்தனர். ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு தடாலடியாக மாறியது. சுப்மான் கில் 33 ரன்னிலும் (24 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), நிதிஷ் ராணா 57 ரன்னிலும் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ராகுல் சாஹரின் சுழற்பந்து வீச்சுக்கு இரையானார்கள்.

மிடில் ஓவர்களில் அவர் கொடுத்த அழுத்தத்தில் கொல்கத்தா அணியினர் ரன் எடுக்க முடியாமல் திணறினர். திரிபாதி (5 ரன்), கேப்டன் மோர்கன் (7 ரன்), ஷகிப் அல்-ஹசன் (9 ரன்) ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. மும்பையின் மாயாஜால பந்து வீச்சில் கடைசி 5 ஓவர்களில் ரன் எடுப்பது எப்படி என்றே தெரியாமல் கொல்கத்தா அணியினர் விழிபிதுங்கினார்கள்.

மும்பை வெற்றி

கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. அதிரடி சூரர்கள் தினேஷ் கார்த்திக், ஆந்த்ரே ரஸ்செல் களத்தில் இருந்தனர். பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசினார். அட்டகாசமாக பந்து வீசிய பவுல்ட், ரஸ்செல் (9 ரன்), அடுத்து வந்த கம்மின்ஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் மும்பை அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது முதலாவது வெற்றியாகும். ராகுல் சாஹர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

எப்போதும் கொல்கத்தாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் மும்பை அணி அந்த அணிக்கு எதிராக ஒட்டுமொத்தத்தில் பெற்ற 22-வது வெற்றி இதுவாகும்.

5 விக்கெட் வீழ்த்தி ரஸ்செல் சாதனை

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா வேகப்பந்து வீச்சாளர் ஆந்த்ரே ரஸ்செல் 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். ஆட்டத்தின் 18-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், 20-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை அறுவடை செய்தார். 15 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை அள்ளிய ரஸ்செலுக்கு இதுவே 20 ஓவர் போட்டியில் சிறந்த பந்து வீச்சாகும்.

முதல் 13 ஐ.பி.எல். போட்டித் தொடர்களில் மும்பைக்கு எதிராக எந்த பவுலரும் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தியதில்லை. ஆனால் இந்த சீசனில் மும்பைக்கு எதிரான முதல் 2 ஆட்டங்களில் இரண்டு பவுலர்கள் தலா 5 விக்கெட் வீழ்த்தி பிரமாதப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே மும்பைக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 27 ரன் மட்டுமே வழங்கி 5 விக்கெட்டுகள் சாய்த்து இருந்தார்.

மும்பைக்கு எதிராக சிறந்த பந்து வீச்சு, கொல்கத்தா பவுலரின் சிறந்தபந்து வீச்சு ஆகிய இருவித பெருமைகளையும் இப்போது 32 வயதான ஆந்த்ரே தன்வசப்படுத்தியுள்ளார்.


Next Story