‘இதய துடிப்பை எகிற வைத்து விட்டனர்’; பஞ்சாப் வெற்றி குறித்து பிரீத்தி ஜிந்தா பரவசம்


‘இதய துடிப்பை எகிற வைத்து விட்டனர்’; பஞ்சாப் வெற்றி குறித்து பிரீத்தி ஜிந்தா பரவசம்
x
தினத்தந்தி 14 April 2021 12:09 AM GMT (Updated: 14 April 2021 12:09 AM GMT)

கடந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் பஞ்சாப் அணி இரண்டு ஆட்டத்தில் ‘டை’ ஆகி சூப்பர் ஓவரில் மல்லுகட்டியது.

 ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 223 ரன்கள் குவித்தும், எதிரணி கடைசி ஓவரில் சேசிங் செய்தது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியையும் இதே போல் பரபரப்புடனே பஞ்சாப் அணி தொடங்கியிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 221 ரன்கள் சேர்த்த போதிலும் வெற்றி கிடைத்து விடுமா? என்ற பதைபதைப்போடு கடைசி பந்து வரை போராட வேண்டி இருந்தது. 

4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றதும் நிம்மதிபெருமூச்சு விட்ட பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை பிரீத்தி ஜிந்தா இது பற்றி தனது டுவிட்டர் பதிவில், ‘ஆம்...என்ன ஒரு அற்புதமான ஆட்டம். நாங்கள் புதிய பெயர், புதிய சீருடையுடன் களம் இறங்கி உள்ளோம். ஆனாலும் போட்டியை பார்க்கும் எங்களுக்கு இதய துடிப்பை எகிற வைப்பதை மட்டும் பஞ்சாப் அணியினர் நிறுத்தமாட்டார்கள் போலும். இது எங்களுக்கு சரியான போட்டியாக இல்லை. ஆனால் முடிவு எங்களுக்குரியதாக அமைந்தது. லோகேஷ் ராகுல், தீபக் ஹூடா மற்றும் அனைத்து பஞ்சாப் வீரர்களுக்கும் வாழ்த்துகள். போட்டியை வெற்றியுடன் தொடங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சஞ்சு சாம்சனின் இன்னிங்ஸ் நம்ப முடியாத அளவுக்கு இருந்ததையும் பாராட்டியாக வேண்டும்’ என்று கூறியுள்ளார்.


Next Story