இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ஹர்திக் பாண்ட்யா தரம் உயர்வு


இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் ஹர்திக் பாண்ட்யா தரம் உயர்வு
x
தினத்தந்தி 16 April 2021 1:17 AM GMT (Updated: 16 April 2021 1:17 AM GMT)

2020-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2021-ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஏ பிளஸ், ஏ, பி சி என்று 4 வகையாக கிரிக்கெட் வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டு ரூ.7 கோடி, ரூ.5 கோடி, ரூ.3 கோடி, ரூ.1 கோடி வீதம் ஆண்டுதோறும் ஊதியம் வழங்கப்படுகிறது. 2020-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2021-ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்படி கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மாற்றமின்றி ஆண்டுக்கு ரூ.7 கோடியை ஊதியமாக பெறும் ‘ஏ பிளஸ்’ பிரிவில் நீடிக்கிறார்கள். ‘ஏ’ பிரிவில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, அஜிங்யா ரஹானே, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ‘பி’ பிரிவில் விருத்திமான் சஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால், ‘சி’ பிரிவில் குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், சுப்மான் கில், ஹனுமா விஹாரி, அக்‌ஷர் பட்டேல், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் காயத்தால் கடந்த ஆண்டு நிறைய போட்டிகளை தவற விட்ட வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ஏ-ல் இருந்து தரம் இறக்கப்பட்டு பி பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். அதே சமயம் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பி-ல் இருந்து ஏ பிரிவுக்கு முன்னேறியுள்ளார். சமீபத்திய மாதங்களில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி பட்டைய கிளப்பிய சுப்மான் கில், அக்‌ஷர் பட்டேல், முகமது சிராஜ் ஆகியோருக்கு ஒப்பந்தத்தில் சி கிரேடு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனுக்கு ஒப்பந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே பட்டியலில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.

Next Story