ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 16 April 2021 1:33 AM GMT (Updated: 16 April 2021 1:33 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் சென்னை-பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மும்பை, 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 6 நகரங்களில் நடக்கிறது. இதில் முதற்கட்ட ஆட்டங்கள் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர்பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சென்னை சேப்பாக்கம் மற்றும் மும்பை வான்கடே ஸ்டேடியங்களில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. பேட்டிங்குக்கு உகந்த மும்பையில் கணிசமாக ரன் குவிக்கப்படுகிறது. சூட்சுமமான சென்னை ஆடுகளத்தில் 150 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் தடுமாறும் நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் மும்பையில் இன்றிரவு அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சுடன் கோதாவில் குதிக்கிறது. டெல்லிக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதில் சென்னை நிர்ணயித்த 189 ரன் இலக்கை டெல்லி தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், பிரித்வி ஷா இருவரும் அரைசதம் விளாசி எளிதில் எடுக்க வைத்து விட்டனர். சென்னையின் பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது. ‘ஸ்விங்’ தாக்குதலுக்கு பெயர் போன தீபக் சாஹர் அத்தகைய பந்துவீச்சை மறந்துவிட்டது போல் பந்து வீசினார். அத்துடன் தொடக்கத்தில் பவுன்சர்களை வீசி நெருக்கடி கொடுக்கவும் சென்னை பவுலர்கள் தவறினர்.

ஒரே ஆறுதல் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய சுரேஷ் ரெய்னா அரைசதம் அடித்ததுதான். கேப்டன் டோனி ‘டக்-அவுட்’ ஆகி ஏமாற்றினார். வலுவான பஞ்சாப்புக்கு எதிராக அதுவும் வான்கடேவில் சாதிக்க வேண்டும் என்றால் குறைந்தது 200 ரன்கள் அவசியமாகும். பேட்ஸ்மேன்கள் ஒருங்கிணைந்து தெறிக்கவிட்டால் வெற்றிக்கணக்கை தொடங்கலாம்.

தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நிகிடி தாமதமாக வந்து இன்னும் 7 நாள் தனிமைப்படுத்துதலை முடிக்காததால் இன்றைய ஆட்டத்திலும் விளையாடமாட்டார் என்று சென்னை பயிற்சியாளர் பிளமிங் ஏற்கனவே கூறியுள்ளார். இதனால் பந்துவீச்சில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானை 4 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 221 ரன் குவித்த போதிலும் வெற்றிக்காக கடைசி பந்து வரை போராட வேண்டி இருந்தது. கேப்டன் லோகேஷ் ராகுல் (91 ரன்), தீபக் ஹூடா( 64 ரன்), கிறிஸ் கெய்ல்(40 ரன்) அசத்தினர். பேட்டிங்கில் வலிமையான பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்திலும் ரன்வேட்டைக்கு தீவிரமாக உள்ளது. பஞ்சாப்பின் அதிரடி ஜாலத்துக்கு சென்னை அணி முட்டுக்கட்டை போடுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 23 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் சென்னையும், 8-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. கடந்த சீசனில் இரு லீக்கிலும் பஞ்சாப்பை சென்னை அணி துவம்சம் செய்தது நினைவு கூரத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது உத்தப்பா, ரெய்னா, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி அல்லது மிட்செல் சான்ட்னெர், டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், வெய்ன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர்.

பஞ்சாப்: லோகேஷ் ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், கெய்ல், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக்கான், முருகன் அஸ்வின் அல்லது ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ஜய் ரிச்சர்ட்சன், ரிலி மெரிடித், அர்ஷ்தீப் சிங்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story