‘பேட்ஸ்மேன்கள் சாதுர்யமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’- வார்னர்


‘பேட்ஸ்மேன்கள் சாதுர்யமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’- வார்னர்
x
தினத்தந்தி 18 April 2021 8:47 PM GMT (Updated: 18 April 2021 8:47 PM GMT)

‘பேட்ஸ்மேன்கள் சாதுர்யமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’- வார்னர்.

சென்னை, 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை தோற்கடித்தது. இதில் மும்பை நிர்ணயித்த 151 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி தொடக்க விக்கெட்டுக்கு 67 ரன் எடுத்த போதிலும் பின்வரிசை வீரர்கள் சொதப்பியதால் 19.4 ஓவர்களில் 137 ரன்னில் முடங்கிப்போனது.

தொடர்ச்சியாக 3-வது தோல்வியை சந்தித்த பிறகு ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், ‘தோல்வியை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நானும், பேர்ஸ்டோவும் எங்களை நிலைநிறுத்திக்கொண்டு விளையாடினோம். அதன் பிறகு பேர்ஸ்டோவின் (43 ரன்) ‘ஹிட் விக்கெட்’ முறையில் ஆட்டமிழப்பு, எனது ரன்-அவுட் (36 ரன்), மிடில் வரிசை பேட்ஸ்மேன்களின் தவறான ஷாட்டுகளால் வீழ்ச்சிக்கு தள்ளப்பட்டோம். இது எடுக்கக்கூடிய இலக்கு தான். ஆனால் மோசமான பேட்டிங்கால் தோல்வியை தழுவியிருக்கிறோம். நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்து, ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை நிலைத்து நின்று ஆடினால் 150 ஸ்கோரை எளிதில் சேசிங் செய்யலாம். பேட்ஸ்மேன்கள் சாதுர்யமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். அதை செய்ய நாங்கள் தவறி விடுகிறோம். ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு பவுலர்கள் நன்றாக பந்து வீசினர். கூடுதல் பொறுப்புணர்வுடன் ஆட வேண்டியது பேட்ஸ்மேன்கள் தான்.’ என்றார்.

‘வில்லியம்சன் உடல்தகுதியை அறிய உடல்தகுதி நிபுணரிடம் பேச வேண்டும். அவர் வரும் போது எங்கள் அணியில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கக்கூடியவராக இருப்பார்’ என்றும் வார்னர் குறிப்பிட்டார்.

Next Story