டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் 19 வீரர்கள் தக்கவைப்பு


டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் 19 வீரர்கள் தக்கவைப்பு
x
தினத்தந்தி 19 April 2021 9:13 PM GMT (Updated: 19 April 2021 9:13 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டுக்கான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் 19 வீரர்கள் தக்கவைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை, 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2016-ம் ஆண்டு முதல் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நகரம் மட்டுமின்றி மாவட்டம், கிராமங்கள் அளவிலும் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதே இந்த போட்டியின் நோக்கமாகும்.

கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு இந்த போட்டி நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 5-வது டி.என்.பி.எல். போட்டியை கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

இதையொட்டி 8 அணிகளும் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் விவரத்தை டி.என்.பி.எல். நிர்வாகத்துக்கு கடந்த 18-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க கெடுவிதிக்கப்பட்டிருந்தது. இதன்படி சமர்பிக்கப்பட்ட அந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அஜித்குமார், விக்ரம் ஜாங்கிட் ஆகியோரை விடுவித்துள்ளது. அருண், விஜயகுமார், ஆர்.சதீஷ், ராம் அர்விந்த், ஜெகநாத் ஸ்ரீனிவாஸ், சந்தானசேகர், எம்.சித்தார்த், சுஜய், ஹரிஷ்குமார், அருண் குமார், பிரசித் ஆகாஷ், என்.ஜெகதீசன், சாய் பிரகாஷ், கவுசிக் காந்தி, அலெக்சாண்டர், சசிதேவ், ராகுல் மற்றும் பரிமாற்றம் அடிப்படையில் பெறப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் என்று மொத்தம் 19 பேர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோவை கிங்ஸ் அணி டி.நடராஜன், ஷாருக்கான் அஷ்வின் வெங்கட்ராமன் உள்பட 18 வீரர்களையும், மதுரை பாந்தர்ஸ் அருண் கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, ஷாஜகான், ரோகித் உள்பட 17 வீரர்களையும், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி ஆல்-ரவுண்டர்கள் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின் மற்றும் பெரியசாமி, கோபிநாத் உள்பட 15 வீரர்களையும், திருச்சி வாரியர்ஸ் அணி அனிருதா, ரஹில் ஷா, அந்தோணி தாஸ், முரளிவிஜய் உள்பட 19 வீரர்களையும், நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணி பாபா அபராஜித், பாபா இந்திரஜித், அதிசயராஜ் டேவிட்சன் உள்ளிட்ட 15 வீரர்களையும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஆர்.அஸ்வின், விவேக், ஹரிநிஷாந்த் உள்பட 18 வீரர்களையும், திருப்பூர் தமிழன்ஸ் அணி தினேஷ் கார்த்திக், எம்.முகமது, அஸ்வின் கிறிஸ்ட் உள்பட 15 வீரர்களையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. திருப்பூர் தமிழன்ஸ் அணி அபினவ் முகுந்த், மொகித் பன்ஹால், சித்தார்த் அகுஜா, ரூபன்ராஜ், அபினவ் விஷ்ணு ஆகியோரை கழற்றி விட்டுள்ளது.

வீரர்கள் ஒதுக்கீடு

விருப்பம் உள்ள விடுவிக்கப்பட்ட வீரர்களும், மற்ற வீரர்களும் டி.என்.பி.எல். வீரர்களின் ஒதுக்கீடு பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்யலாம். tnpl.tnca.cricket என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். கொரோனா பரவல் காரணமாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பத்தை அளிக்க அனுமதி இல்லை.

வீரர்களின் ஒதுக்கீடு நிகழ்ச்சியை மே 7-ந்தேதி நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. அதற்கு முன்பாக எந்த அணிக்கு முதலில் வீரர்களை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்குவது என்பது தொகை மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. அதற்குரிய அணி நிர்வாகிகளின் சந்திப்பு ஏப்ரல் 30-ந்தேதி நடைபெறும் என்று தெரிகிறது. இந்த தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story