‘என்னை உடல்தகுதி இல்லாதவர் என்று யாரும் கூறி விடக்கூடாது’ சென்னை கேப்டன் டோனி சொல்கிறார்


‘என்னை உடல்தகுதி இல்லாதவர் என்று யாரும் கூறி விடக்கூடாது’ சென்னை கேப்டன் டோனி சொல்கிறார்
x
தினத்தந்தி 21 April 2021 3:48 AM GMT (Updated: 21 April 2021 3:48 AM GMT)

தன்னை நோக்கி யாரும் உடல்தகுதியுடன் இல்லாதவர் என்று கூறிவிடக்கூடாது, அதற்காக உழைக்கிறேன் என்று சென்னை கேப்டன் டோனி கூறினார்.

மும்பை, 

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது.

முதலில் ஆடிய சென்னை அணி 9 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 143 ரன்னுக்குள் அடங்கி தோல்வியை சந்தித்தது. 3 ஓவர்கள் பந்து வீசி 7 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த ஆட்டத்தில் 17 பந்தில் 18 ரன் எடுத்த சென்னை அணியின் கேப்டன் 39 வயதான டோனி கூறுகையில், ‘ஆட்டத்தில் எந்தவொரு நேரத்திலும் எதை செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி தான் யோசிப்பேன். ‘பவர்பிளே’யில் குறிப்பிட்ட பவுலர்களை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் அவர்கள் நெருக்கடியை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும். இந்த ஆடுகளத்தில் ஈரமான பந்து கூட நன்கு சுழன்று திரும்பியது. அதனால் ஜோஸ்பட்லர் ‘ரிவர்ஸ்-ஸ்வீப்’ ஆடியது பெரிதாக தெரியவில்லை. ஈரப்பதமான பந்தே நன்கு சுழன்றதால் ஈரமற்ற பந்து சிறப்பாக சுழலுவதற்குரிய சாத்தியங்கள் அதிகமாக இருந்தது. அணியில் 6-வது பவுலர் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இந்த ஆட்டத்தில் மொயீன் அலி அருைமயாக செயல்பட்டார்.

நாங்கள் 180 ரன்களுக்கு மேல் எடுத்தது மகிழ்ச்சி அளித்தது. அதேநேரத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் ரன் ேசா்த்திருக்கலாம். நான் முதல் 6 பந்துகளை விரயம் ெசய்து விட்டேன். வேறொரு ஆட்டமாக இருந்திருந்தால் இதனால் தோல்வி கூட நிகழ்ந்திருக்கும். நெருக்கடியை சமாளித்து சிறப்பாக செயல்பட எங்கள் பவுலர்கள் பழக்கப்பட்டு விட்டார்கள்.

வயதாகும் போது உடல் தகுதியுடன் இருப்பது என்பது கடினமானது. நீங்கள் விளையாடும் வரை உடல் தகுதியற்றவர் என்று யாரும் உங்களை சொல்லி விடக்கூடாது. களத்தில் திறமையை வெளிப்படுத்துவதில் உத்தரவாதம் அளிக்க முடியாது. 24 வயதில் நான் விளையாடிய போது கூட எனது ஆட்டத்திறன் குறித்து உத்தரவாதம் அளித்ததில்லை. பிறகு 40 வயதில் எப்படி உத்தரவாதம் கொடுக்க முடியும்?. என்னை நோக்கி யாரும் கையை நீட்டி இவர் உடல்தகுதி இல்லாதவர் என்று கூறி விடக்கூடாது. அது தான் எனக்கு நேர்மறையான ஒரு விஷயமாகும். தினமும் கடின பயிற்சி மேற்கொள்ளும் இளம் வீரர்களுக்கு இணையாக எனது உடல் தகுதியும் இருக்க வேண்டும். இது சவாலானது என்றாலும் நல்லது தானே’ என்றார்.

Next Story